நாகர்கோவில், ஜூன் 17- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான ‘‘நான் முதல்வன் திட்டம்’’ சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ் வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் படித்தவர்களுக்கு ஆளுநர் விரைவில் பட்டம் வழங்க வேண்டும். இந்திய அளவில் பெண் கல்வி 28 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 78 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. இது தான் திராவிட அரசின் சாதனை. புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாடு 200 ஆண்டுகள் பின் தங்கிவிடும்’’ எனக் கூறினார்.