tamilnadu

img

என்டிபிஎல் தொழிலாளர் 4வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி, பிப். 16 என் டி பி எல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு திரம்ப கோரி ஒப்பந்த காரர்கள் தரப்பில் கடிதம் அனுப்பி மிரட்டி வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். என் எல் சி தமிழ்நாடு பவர் லிமிட்டெட் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்  பிப்ரவரி  13 ஆம் தேதி காலை 6 மணி முதல்  பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) என்.டி.பி.எல் அனல் மின் நிலைய கிளைச் செயலாளர் அப்பாதுரை தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நிர்வாகத்துடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தொடர்ந்து வியாழனன்று நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது  வியாழனன்றுபோராட்டத்தை வாழ்த்தி பேசினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஆள்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், உப்பு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் பொன்ராஜ், சி ஐ டி யு மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஆட்டோ சங்கம் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் என்டிபி எல் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. என் டி பி எல் சார்பில் வழக்கறிஞர் லஜபதி ராய் ஆஜராகி வாதாடினார். போராடும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பு அளித்தார். என் டி பி எல் நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய 1200 ஒப்பந்த ஊழியர்கள் 17 ஒப்பந்தக்காரர்கள் கீழ் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு தனித்தனியாக அந்தந்த ஒப்பந்தக்காரர்கள் மூலம் சட்டவிரோதப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்புமாறும் அவ்வாறு திரும்பவில்லை எனில் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கடிதம் அனுப்பி உள்ளனர்.   ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த ஊழியர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.