சிதம்பரம், டிச. 14- சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அனுமதி பெறாமல் கடந்த பல ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகளை தீட்சிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே கட்டப்பட்ட விதிமீறலுக்கு உட்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம் பரத்தைச் சேர்ந்த ராதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது தீட்சிதர்கள் கட்டுமான பணியில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என இந்து அறநிலை துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு கொண்ட சிறப்பு அமர்வில் புதன்கிழமை (டிச.13) விசாரணைக்கு வந்தது.
அப்போது தீட்சிதர்கள் உத்தரவாதம் அளித்த பின்னரும் கட்டுமானத்தை தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் மேற்கொள்கின்றனர். அதற்கு ஆதாரமாக புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர். அதற்கு நீதிபதிகள் பாரம்பரியமிக்க புராதன சின்னமாகத் திகழும் சிதம்பரம் கோவில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் கோவில் என்பது பக்தர்களின் சொத்து அதன் மீது யாரும் உரிமை கூற முடியாது என்று கூறினர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(டிச.14) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர் ஐஏஎஸ் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், முதன்மை பொறியாளர் பெரியசாமி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்கள், பரணிதரன், ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், தொல்லியல் துறை ஆலோசகர் மணி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் விதிமீறல்கள் மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம் எனத் தீட்சிதர்கள் சந்தித்து கடிதம் அளித்தனர். அதற்குத் தீட்சிதர்கள் கோவில் செயலாளர் இல்லை என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில் ஆய்வு குழுவினர் கோவில் உள்ளே நடராஜர், அம்மன் சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர், “கோவிலில் பிரதான சின்னங்களை அழித்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜகோபுரங்கள் அருகில் புதுப்புது சன்னதிகளை கட்டியுள்ள னர்”என்றார். கோவில் உள் பிரகாரத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளனர். பண்டைய ஓவிய சின்னங்களை அழித்து வரலாற்றை மாற்றியது. கல்வெட்டு எழுத்துக்களை அழித்து வண்ணம் தீட்டியது. யானைக்கு மண்டபம், மாட்டு தொழுவம், அன்னதான கூடம் என அமைத்துள்ளனர். 4 இடத்தில் ஆழ்துளை மூலம் போர் போட்டுள்ளனர். கோவிலில் விதிமீறல்கள் உள்ளதை உயர் நீதிமன்றத்தில் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கோவில் தீட்சிதர்கள் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில்,“கோவில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து அனுமதி இல்லாமல் ஆய்வு செய்துள்ளனர். கோவிலில் எந்த விதி மீறல்கள் கட்டிடமும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கோவில் பக்தர்கள் சொத்து எனக் கூறியது. நீதிமன்றத்தின் கருத்து தான் அது தீர்ப்பு அல்ல. 1951 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் இந்தக் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்திற்குரியது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது”என்றார்.