tamilnadu

img

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை

மும்பை:
மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.மும்பை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளிலும், ரயில் நிலையங்களில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களின் வீடு களுக்கும் மழைநீர் புகுந்ததையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

போக்குவரத்து சேவை ரத்து
மும்பை சர்வதேச விமான நிலையமும் நீரில் மூழ்கி இருப்பதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, இதுவரை 54 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பல இடங்கள் நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, விமான நிலையம் செயல்பாட்டிற்கு வர 48 மணி நேரம் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
வாகனம், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரயில்நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான ரயில்கள் மும்பை ரயில் நிலையங்களிலேயே நிறுத்திவைக்கப்பட்டன. மும்பை - புனே இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. 

பொது விடுமுறை
செவ்வாய்கிழமை காலை வரை மழை தொடர்ந்து நீடித்ததால், மும்பை சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அடுத்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது. இதனால் மும்பையில் செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சுவர் இடிந்து விபத்து
அதேபோல், தொடர் மழை காரணமாக பிம்பிரபாடா, கல்யான் ஆகிய இரண்டு இடங்களில் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 24 பேர் பலியாகினர். மேலும், இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். சுவர் இடிந்து விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ.5 லட்சம் நிதி அறிவித்துள்ளது. தொடர் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் மட்டும் அடுத்த 3 தினங்களில் 200 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;