tamilnadu

img

யெஸ் வங்கி முறைகேடு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

யெஸ் வங்கி பண மோசடி விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தனியார் வங்கியான யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
ரிசர்வ் வங்கி  கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் இணைய வங்கி சேவையை பயன்படுத்துவதிலும், யுபிஐ வழியாக பணம் செலுத்துவதிலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும்  இடையூறு ஏற்பட்டது. 
இதன் காரணமாக யெஸ் வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதிலும், சம்பளம் வழங்குவதிலும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில், யெஸ் வங்கியில் பெற்ற கடன்கள் தொடர்பாக அனில் அம்பானி விசாரிக்கப்பட உள்ளார். எனினும், உடல்நிலைகளைக் காரணம் காட்டி அனில் அம்பானி அதிகாரிகள் முன்பு ஆஜராக மேலும் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிற ரிலையன்ஸ் குழும அதிகாரிகளும் இந்த வார இறுதியில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.