tamilnadu

img

‘நமோ டிவி’ செலவினை மறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? - சீத்தாராம் யெச்சூரி

‘நமோ டிவி’ செலவினை மறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முதலில், பீகார் சட்டமன்றத் தேர்தலில், 64 வயதுக்கு மேம்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்குரிமை அளிக்கும் முடிவை கிடப்பில் போட்டிட, முடிவெடுத்திருப்பதற்கு எங்கள் ஏற்பளிப்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனினும், வாக்காளர்களை நேரடியாக சரிபார்க்கும் கொள்கையை உத்தரவாதப்படுத்துவதே, மற்ற அனைத்து யோசனைகளையும்விட சிறந்தது என்பதால், அஞ்சல் வாக்கு முடிவை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்கிற எங்கள் கருத்தை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தேர்தல் ஆணையத்தால் சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அனைத்துத்தரப்பினரையும் கலந்தாலோசிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் மறுத்துள்ள போதிலும், (இவ்வாறுதான் இத்தனை காலமும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது), இது தொடர்பாக காரண காரியங்களுடன் முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஓர் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  அடுத்ததாக, டிஜிடல் தேர்தல் பிரச்சார முன்மொழிவு குறித்தும், அத்துடன் அதைவிட மிகவும் முக்கியமாக தேர்தல் நிதி சம்பந்தமான அடிப்படைப் பிரச்சனை குறித்தும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.  உண்மையில், பீகார், முதன்மைத் தேர்தல் ஆணையர், கொரோனா வைரஸ் தொற்று பொங்கி எழுந்துகொண்டிருப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த தேர்தல் பணியும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று கூறிய முன்மொழிவை, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. காரணம் இதற்கு வாக்காளர்களைச் சந்திப்பதில் பெரிய அளவில் இடைவெளி ஏற்படும் என்பது மட்டுமல்ல, வாக்காளர்களைச் சந்திப்பதற்குப் பெரிய அளவில் நிதி ஆதாரங்களும் தேவைப்படும் என்பதாலும் இதனை அவர்கள் எதிர்த்தனர்.

கீழ்க்காணம் நிகழ்ச்சிப்போக்குகளைத் தாங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 2019 பொதுத்தேர்தலின்போது, அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அமித் ஷா, தங்கள் கட்சி 32 லட்சம் ‘வாட்சப்’ குழுக்களுடன் வலைப்பின்னலைக் கொண்டிருப்பதன் காரணமாக, ஒரு செய்தியை, அது உண்மையானதாகவோ அல்லது பொய்யானதாகவோ இருந்தாலும், ஒருசில மணி நேரத்தில் வைரலாகக் கொண்டுசெல்ல முடியும் என்று பொதுக்கூட்ட மேடையிலேயே தெரிவித்திருந்தார். இத்துடன் மேலும், சர்வதேச அளவில் இணைய தளங்களின் உண்மைத்தன்மைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள், பொய்ச் செய்திகளில் பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உற்பத்திசெய்யப்படுகின்றன என்று கூறியிருக்கின்றன. இப்போது பீகார் சட்டமன்றத் தேர்தலின்போதும், அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக 72 ஆயிரம் எல்இடி டிவி மானிடர்களை (LED TV monitors) பொருத்தியதைப் பார்த்தோம். ஆன்லைன் மூலமாக 60 பேரணி/பொதுக்கூட்டங்களை நடத்தியபின்னர், பாஜக தங்களுடைய தேர்தல் பிரச்சார முயற்சிகள், 9500 ஐ.டி.செல்களை சம்பந்தப்படுத்திடும் என்றும், இவற்றின் மூலம் 72 ஆயிரம் ‘வாட்சப்’ குழுக்களும் இணைக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறு 50 ஆயிரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.

இத்தகைய தொழில்நுட்பத்திற்குத் தேவைப்படும் மனித சக்தி மற்றும் செலவினத்தைக் கணக்கில்  கொண்டோமானால், மலைப்பைத் தட்டும். கார்ப்பரேட்டுகளின் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக பெற்றிருக்கும் நிதி விவரங்களுடன் பாஜகவிற்கும் இதர கட்சிகளுக்கும் இடையேயுள்ள நிதி நிலைமைகளைப் பார்க்கும்போது, பாஜகவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே இடைவெளி மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருப்பதைக் காண முடியும். உச்சவரம்பு எதுவுமின்றி தேர்தல் பத்திரங்களை அநாமதேயமான பெயர்களில் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெறுவது நிச்சயமாக தேர்தல் ஜனநாயகத்தை சவக்குழிக்குள் தள்ளிவிடும்.

முன்னதாக, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்திடம், “தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் அரசியல் நிதி தொடர்பாக இருந்துவரும் வெளிப்படைத்தன்மை அம்சங்கள் மீது ஆழமான முறையில் விளைவுகளை ஏற்படுத்திடுவதற்கான சமிக்ஞையாக அமைந்திடும்,” என்றும் இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் 2017ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் முழுமையாக மாற்றங்களைக் கொண்டுவந்தும், அதன்பின்னர் வருமான வரிச் சட்டத்திலும் மற்றம் மக்கள் பிரதிநிதிச் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வந்தும்  கட்டாயமாக வசூலிக்கப்பட்டிருக்கின்றன என்றும், சுட்டிக்காட்டி இருந்தது. “இத்தகைய நிலைமையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றிடும் நன்கொடைகள் குறித்து வெளியில் தெரிவிக்கப்படாததால், அரசாங்க நிறுவனங்களிடமிருந்தோ மற்றம் அந்நிய நாடுகளிடமிருந்தோ ஒரு கட்சி நன்கொடை பெறுவதைத் தடைசெய்திடும், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 29-பி பிரிவை மீறி ஓர் அரசியல் கட்சி நன்கொடை பெறுகிறதா என்பதை அறிந்திட முடியாது,” என்றும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் உறுதிவாக்குமூலம் தாக்கல் செய்தது. மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம் மேலே உறுதிவாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் ஏற்கனவே 2017 மே மாதத்தில் ஒரு கடிதம் மூலமாக சட்ட அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும், அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தங்கள் கட்சிகளின் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டுக் கணக்கு மற்றும் தேர்தல் செலவின அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் 2014 ஆகஸ்ட் 29 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்த வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தையும் மெய்யானமுறையில் தடம்புரளச்செய்துவிட்டன என்றும்கூறி உறுதிவாக்குமூலத்தில் தன் ஏற்பின்மையை வெளிப்படுத்தி இருந்தது.

“2017ஆம் ஆண்டு நிதிச் சட்டம், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் கம்பெனிகள் சட்டம் உட்பட எண்ணற்ற சட்டங்களைத் திருத்தி இருக்கிறது. மேலும், 2016ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் 2010ஆம் ஆண்டு அந்நியப் பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்,  அந்நிய நிறுவனங்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் நன்கொடை பெறுவதை அனுமதிக்கிறது. முன்பிருந்த சட்டத்தின்படி இந்திய நிறுவனங்கள், அந்நிய நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவது தடைசெய்யப்பட்டிருந்தன.  இவ்வாறு திருத்தங்கள் செய்ததன் மூலம், இந்தியாவில் அரசியல் கட்சிகள் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதை மூடிமறைத்திட அனுமதிக்கிறது என்றும், இதன்மூலம் இந்தியாவின் கொள்கைகள் மீது அந்நிய நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்திட இட்டுச்செல்லும்,” என்றும் தேர்தல் ஆணையம் தன் உறுதிவாக்குமூலத்தில் விமர்சித்திருந்தது.  

தேர்தல் பத்திரங்கள் திட்டம் பெரிய அளவில் வெளிப்படைத்தன்மையுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அரசாங்கம் அவ்வாறு நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளின் விவரங்களை வெளியிட அனுமதிப்பதை தடுத்திடக் கூடாது என்று பல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்திட்ட உறுதிவாக்குமூலத்தில் கண்டுள்ள கூற்றுகளின்படி பார்த்தாலும், இப்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் மறைக்கப்பட்டுவருவதன் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதிபெறுவதில் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு இருக்காது என்பது மட்டுமல்ல, தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதும் தெளிவுபடத் தெரிகிறது.

அதே சமயத்தில், பெரிய சவால்களாக இருக்கக்கூடிய மேலும் இரு பிரச்சனைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முதலாவதாக, மர்மமான நமோ டிவி (NaMo TV) அலைவரிசை. இது அப்போதிருந்த சட்டத்தை மீறி, 2019 மக்களவைத் தேர்தலின்போது ஏவப்பட்டது.  பின்னர் தேர்தல் முடிந்தபின் மர்மமான முறையில் காணாமலும் போய்விட்டது. 2019 ஏப்ரலில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர், டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த அலைவரிசைக்காக பாஜக-வினால் செலவு செய்யப்பட்டது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். எனினும், இப்போது பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள கணக்குகளில் இந்தச் செலவினம் காட்டப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான ஒரு தேர்தல் குற்றமாகும். இதற்காக தேர்தல் ஆணையம், பாஜகவிற்கு எதிராக தண்டனை நடவடிக்கை எதுவும் எடுத்திருக்கிறதா என்கிற உடனடிக் கேள்வி எழுகிறது. இல்லை எனில், ஏன் இல்லை? இந்தியத் தேர்தல் ஆணையம், பாஜக-வின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கடும் நடவடிக்கை எதுவும் எடுக்காததை விட்டுவிட்டாலும்கூட, ‘நமோ டிவி’ தொடர்பாக, பாஜகவிற்கு எதிராக தெளிவான உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததிலிருந்து, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சம வாய்ப்பு அளிக்க வில்லை என்று உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இரண்டாவது பிரச்சனை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பிரச்சாரம் சம்பந்தப்பட்டது. பாஜக நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமான விளம்பரம் மற்றும் சமூக ஊடக நிறுவனம் ஒன்று, மகாராஷ்ட்ரா முதன்மை தேர்தல் அதிகாரியால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளம்பரங்கள் 2019 சட்டமன்றத் தேர்தலின்போது வெளியிடப்பட்டன என்றும் செய்திகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் 2019 மக்களைத் தேர்தலின்போதும் மேற்படி அதே சமூக ஊடக ஏஜன்சியை நியமனம் செய்து கொள்வதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்ததாகவும் செய்திகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இது தொடர்பாக இப்போது பொதுவெளியில் ஏராளமான விவரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு இருக்கின்ற சுதந்திரமான அரசமைப்புச்சட்ட அந்தஸ்தின்படி, அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவின்படி, நியாயமான தேர்தலை உத்தரவாதப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இவ்விவகாரங்கள் குறித்து நியாயமாகவும் நேர்மையகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, அவ்வாறு நடந்துகொள்வதாக அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவதும் மேலும் அவசியமான ஒன்றாகும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.