tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட நவம்பர் 26 வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்போம்

போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், நவம்பர் 26 அன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ளவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்போம் என்று அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவின் மெய்நிகர் கூட்டம் நவம்பர் 6 அன்று நடைபெற்றது. ஐஎன்டிடபிள்யுஎப் (INTWF) பொதுச் செயலாளர் உமேஷ் குமார் ஷர்மா தலைமை வகித்தார். ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, டியுசிஐ, தொமுக ஆகிய சங்கங்களும் மற்றம் பல்வேறு சுயேச்சையான சங்கங்களம் இதில் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் தொழில் குறித்தும் மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  அபரிமிதமாக உயர்ந்துள்ள டீசல் விலைகள், இன்சூரன்ஸ் பிரிமியம் விகிதங்கள், டோல் கட்டணங்கள், சாலை வரி மற்றும் இதர சுமைகள் எந்த அளவிற்குப் போக்குவரத்துத் தொழிலை நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. இந்தத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், தாங்கள் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று நன்கு தெரிந்தும்,  சமூக முடக்கக் காலத்திலும் 24 மணி நேரமும் வேலை செய்தனர். இவ்வாறு இடரார்ந்த நிலையில் கடினமாகப் பணிசெய்த போதிலும், இக்காலத்தில் கோவிட்-19 தொற்றால் இறந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் எவருக்கும் பிரதமரால் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று அறிவிக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து எவ்வித உதவியும் கிடைக்கப்பெறவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களில் அமைப்புக்குள் வராத தொழிலாளர்கள் எந்தத் தொழிலாளர் நலச் சட்டங்களுக்குள்ளும் வரவில்லை. அவர்களுக்கென்று எவ்விதமான சமூகப் பாதுகாப்பும் கிடையாது.  

இவ்வளவு நிச்சயமற்ற நிலைமைகளில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர வேறு மாற்று எதுவும் கிடையாது.

மோடி அரசாங்கத்தின் தனியார்மயம், கார்ப்பரேட்மயக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலைமையை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களின் சுமைகளை அதிகரித்திருக்கின்றன. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதீத அளவிற்குச் செலவு செய்ய வேண்டியிருப்பதால், அது நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளைப் பறித்திருக்கிறது.

இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு, வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறும், அதன்மூலம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வலிமையையும் ஒற்றுமையையும் ஆட்சியாளர்களுக்குக் காட்டுமாறும் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. வேலைநிறுத்தத்தின் வெற்றி மூலம், போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய நிலையில் அதனைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டார்கள் என்பதை அரசாங்கத்திற்குக் காட்டக்கூடிய ஒரு சமிக்ஞையை அனுப்பிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்கள் வருமாறு: ஐஎன்டியுசி, இந்தியன் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேசிய சம்மேளனம்(NFIRTW-National Federation of Indian Road Transport Workers), அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), தொமுச, இந்தியத் தொழிற்சங்கக் கவுன்சில் (ஏஐசிசிடியு), போக்குவரத்து மஸ்தூர் யூனியன் (டிஎம்யு-டிஎஸ்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பெஸ்ட் தொழிலாளர் யூனியன்.

(ந.நி.)