இனி ஆன்லைனில் பசுக்களை தத்தெடுக்கலாம் என்று மத்தியபிரதேச அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் திட்டமிட்டு வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் சுற்றித் திரியும் பசுமாடுகளை பாதுகாப்பதற்காக கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோசாலைகளில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வழங்குவதற்காக சிறப்பு திட்டம் ஒன்றையும் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பசுகள் ஆன்லைன் மூலம் தத்துக்கொடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பசுகள் கோசாலையிலேயே பராமரிக்கப்படும். அந்த பசுகளுக்கு தீவனத்தை ஒருவர் விரும்பினால் வழங்கலாம். இதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைன் மூலமே பசுக்களை தத்தெடுக்கும் நடைமுறையை மேற்கொள்ளலாம்.
15 நாட்களுக்கு ஒரு பசுவுக்கு தீவனம் வழங்க ரூ. 1,100 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு மாட்டை தத்தெடுத்தால் ஆறு மாதங்களுக்கு ரூ. 11,100 செலுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒரு மாட்டை பராமரிக்க 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
‘‘மாநிலம் முழுவதும் மொத்தம் 626 கோசாலைகள் உள்ளன. இந்த கோசாலைகளில் உள்ள ஒரு பசுவுக்கு 5 கிலோ பசுந்தீவனமும், 10 கிலோ உலர் தீவனமும் வழங்க வேண்டும்.
இதற்கு அதிகமான தொகை தேவைப்படும் என்பதால் நிதியுதவி செய்பவர்களை தேடி வருகிறோம். நன்கொடை வழங்குபவர்கள் எங்களை அணுகலாம்’’ என்று அம்மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.