tamilnadu

img

டிசம்பரில் வேலையின்மை 7.7 சதவிகிதமாக அதிகரிப்பு... பாஜக ஆளும் 6 மாநிலங்களில் நிலைமை மேலும் படுமோசம்

புதுதில்லி:
2014-ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.குறிப்பாக, 2016-இல் பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், 2017-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை நாட்டின் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துவங்கி, ஒட்டுமொத்த தொழிற்துறைகளையும் அழித்துவிட்டது. சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலையை இழந்து நடுத் தெருவிற்கு வந்து விட்டனர். தற்போதுவரை, புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாகவில்லை.இதனால், வேலையில்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாத ஊழியர்களும் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகின்றனர். 2019ஆம் ஆண்டில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றுபாஜக உறுதியளித்தது. ஆனால் ஒவ்வொருமாதமும் வேலையின்மைதான்  அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதற்கு, மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy -CMIE) வெளியிட்டுள்ள அறிக்கையே சான்றாகி உள்ளது. 

டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.7 சதவிகிதமாக உயர்ந்திருப்ப தாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் வேலை யின்மை விகிதம் 7.48 சதவிகிதமாக இருந்த நிலையில், அதைக்காட்டிலும் வேலையின்மை தற்போது அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 8.81 சதவிகிதமாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் அது 8.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, கிராமப்புறங் களில் நவம்பர் மாதத்தில் 6.82 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பர் மாதத்தில் 7.13 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ள இந்தியாவின் 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாகவோ அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களாகவோ இருப்பதையும், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

திரிபுரா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் ஆகியமாநிலங்களில் வேலையின்மை 20 சதவிகி தத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியா வில் வேலையின்மை மிக அதிகமாக உள்ள மாநிலமாக திரிபுரா (28.6 சதவிகிதம்) உள்ளது. ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 27.6 சதவிகிதமாக உள்ளது. இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 20.2 சதவிகிதம், ஜார்க்கண்ட்டில்17.7 சதவிகிதம், ராஜஸ்தானில் 15.9 சதவிகிதம் என வேலையின்மை அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வேலையின்மை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2018-இல் 5.91 சதவிகிதத்திலிருந்து 2019-இல் 9.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 16 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேசத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல பீகாரில் வேலையின்மை 2018-இல் 7.84 சதவிகிதத்திலிருந்து 11.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும், வேலையின்மை விகிதம் முறையே 3.9 சதவிகிதம், 4.7 சதவிகிதம் மற்றும் 4.4 சதவிகிதம் என அதிகரித்துள்ளன.

;