tamilnadu

img

இந்தி ஆசிரியர்களை நியமிக்க பட்ஜெட்டில் ரூ. 50 கோடி!

புதுதில்லி:
மத்திய பட்ஜெட்டில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ள நிலையில், இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்கு மட்டும்,ரூ. 50 கோடி வாரி இறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழு, அண்மையில் மத்திய அரசிடம் தாக்கல்செய்த புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில், இந்தி மொழிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் ஆபத்தான பரிந்துரைகள் அதில் இருந்தன.

இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா,மேற்குவங்கம் மட்டுமன்றி, மகாராஷ்டிரா, பீகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், திடீரென, இந்தியைக் கட்டாயமாக்க மாட்டோம் என்று மோடி அரசு பின்வாங்கியது.இந்நிலையில்தான், நிர்மலாசீதாராமன், வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்த மத்தியபட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு என்று 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் விமர்சனம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, 25 சதவிகிதத்துக்கு அதிகமாக உருது பேசும் பகுதிகளில், உருது மொழிக்கான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இந்தத் திட்டம் மூலம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.