tamilnadu

img

உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 1 - என்.ராமகிருஷ்ணன்

ஆங்கிலேய அரசாங்கம்  இந்தியா சுதந்திரம்பெற தகுதியுள்ளதா? என்பதைக்கண்டறிய சைமன்கமிஷன் என்ற குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தக் குழுவை எதிர்த்து நாடு முழுவதிலும் அதுவரை கண்டிராத அளவில் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள்,  ஊர்வலங்கள் நடத்தும்படியும் பிப்ரவரி 3ஆம் தேதியை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கும்படியும்  காங்கிரஸ் கட்சி விடுத்த அறைகூவலை ஏற்று கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தொழிலாளி வர்க்கம் மிகப்பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. பம்பாய், கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1929ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று இந்நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளோடு நெருக்கமாக இருந்த தோழர்களையும் சேர்த்து 31 பேரை கைது செய்து ஒரு மாபெரும் சதி வழக்கை தொடுத்தது. அன்றைய நாளில்தான் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் என்ற சிறிய நகரின் மாவட்ட நீதிபதி இந்த 31 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதுதான் உலகப் புகழ்பெற்றதும் நான்காண்டு காலம் நீடித்ததுமான மீரட் சதி வழக்கு. 

1924ஆம் ஆண்டில் முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, சௌகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்ட நான்கு பேர் மீது கான்பூர் சதி வழக்கை ஆங்கிலேய அரசாங்கம் தொடுத்து நான்காண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்தது. அந்த வழக்கு இந்தியப் பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வந்து நாடு முழுவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பெரும் தகவல்களை தந்திருந்ததால் இம்முறை ஆங்கிலேய அரசாங்கம் அத்தகைய பெரிய செய்திகள் வராமல் இந்த வழக்கை நடத்துவதற்காக அன்று மிகச் சிறிய நகரமாக இருந்த மீரட் நகரில் இந்த வழக்கை நடத்தியது. இந்த வழக்கை நடத்துவதற்கு என்ன காரணம்?

1928ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் இந்தியா சுதந்திரம் பெற தகுதியுள்ளதா? என்பதைக் கண்டறிய சைமன் கமிஷன் என்ற குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தக் குழுவை எதிர்த்து நாடு முழுவதிலும் அதுவரை கண்டிராத அளவில் பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும்படியும் பிப்ரவரி 3ஆம் தேதியை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கும்படியும் காங்கிரஸ் கட்சி விடுத்த அறைகூவலை ஏற்று கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தொழிலாளி வர்க்கம் மிகப் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. பம்பாய், கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சைமன் தூதுக்குழு சென்ற இடங்களில் எல்லாம் ‘மைசனே! திரும்பிப்போ’ என்ற மக்களின் முழக்கம் எங்கும் எதிரொலித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் காவல்துறை கொடூரமான தடியடி நடத்தியது. பஞ்சாபில் பிரபல காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராயின் மார்பில் காவலர்கள் தடியால் அடித்தனர். இதன் விளைவாக சிறிது காலத்திற்குள் அவர் காலமானார். 

இதே 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பம்பாய் பஞ்சாலை தொழிலாளிகள் நடத்திய வேலைநிறுத்தம் இந்திய நாட்டின் வரலாற்றிலேயே மகத்தானதாகும்.ஆறு மாத காலம் நீடித்த இந்த வேலைநிறுத்தத்திற்கு கம்யூனிஸ்ட்டுகள் முன்முயற்சி எடுத்து தலைமை தாங்கினர். இதைத்தொடர்ந்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட  பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் (பம்பாய் கிர்ணி காம்கார் சங்கம்) உருவானது. அதேபோன்று கல்கத்தாவில் லட்சக்கணக்கான சணல் தொழிலாளிகள் செங்கொடி ஏந்தி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தினர். இவ்வாறு இந்தியாவில் தொழிலாளி வர்க்க போராட்டங்கள் தீரமிக்க முறையில் அதிகரித்து வருவதையும் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு வளர்ந்து வருவதையும் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அதிர்ச்சியடைந்து பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது. அதன் விளைவு தான் இந்த மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு. ஆங்கிலேய அரசாங்கத்தின் கோபத்திற்கு மற்றொரு காரணம் உண்டு. இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான பெர்சி கார்டினும், ஜார்ஜ் அலிசனும் பிலிப்ஸ் பிராட்டும், பென் பிராட்லியும், இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்வதற்காக இங்கே வந்தனர். அதேபோன்று ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஜே.எப்.ரியான் என்பவரும் நவம்பர் மாதம் இந்தியா வந்தார். இவர்களைத் தொடர்ந்து எச்.எல்.ஹட்சின்சன் என்ற இங்கிலாந்து கம்யூனிஸ்ட்டும் இங்கே வந்தார். ஆங்கிலேயர்களான இவர்கள் அனைவரும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உதவி செய்ய வந்தது ஆங்கிலேய அரசாங்கத்திற்கு மேலும் கோபம் உண்டாக்கியது.  எனவே தான் இந்த அனைத்துக் காரணங்களையும் வைத்து மீரட் சதி வழக்கு தொடங்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்கள் யார்?

1. விஸ்வநாத் முகர்ஜி - ஐக்கிய மாகாண தொழிலாளி- விவசாயிகள் கட்சியின் தலைவர்
2. கேதார்நாத் சைகல் - பஞ்சாப் காங்கிரஸ் குழுவின் தலைவர்
3. கௌரி சங்கர் - ஐக்கிய மாகாண தொழிலாளிகள் - விவசாயிகள் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்
4. சிவநாத் பானர்ஜி - வங்காள சணல் தொழிலாளர் சங்கத் தலைவர்
5. எம்.ஜி.தேசாய் - ‘ஸ்பார்க்’ (பொறி) ஏட்டின் ஆசிரியர் பம்பாயிலிருந்து வெளிவந்த தீவிர சோசலிஸ்ட் ஏடு
6. லட்சுமன் ராவ் கடம் - 4 ஜான்சியில் நகராட்சி ஊழியர்களின் அமைப்பாளர்.
7. டி.ஆர்.தெங்டி - தொழிற்சங்க காங்கிரசின் முன்னாள் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினர்
8.எஸ்.எச். ஜாப்வாலா - அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் அமைப்புச் செயலாளர்
9. ஏ.ஏ - ஆல்வே : பஞ்சாலை ஊழியர், பம்பாய் கிர்னி காம்கார் சங்கத்தின் தலைவர்
10. ஜி.ஆர் காஸ்லே - பஞ்சாலை தொழிலாளி, கிர்னி காம்கார் சங்கத்தின் நிர்வாகி
11. கிஷோரிலால் கோஷ் - வங்காள மாகாண தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர்
(இந்த 11 பேரும் கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரி தலைவர்கள் - பெரும் வெகுஜன இயக்கங்களின் தலைவர்கள்)

- தொடரும்