புதுதில்லி:
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், கடந்த2 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அபாய கட்டத்திற்கு போயிருப்பதாக மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.
தனது பதவி விலகலுக்கு, மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே காரணம் என்றும் கார்க் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய நிதித்துறை செயலராகஇருந்தவர் சுபாஷ் சந்திர கார்க்.ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2019 ஜூலை 24அன்று, மத்திய மின்துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக விருப்ப ஓய்வுகேட்டு விண்ணப்பித்தார். பணியிடமாற்றத்திற்கும் விருப்ப ஓய்வு முடிவுக்கும் சம்பந்தமில்லை என்றுமட்டும் கூறிய கார்க், எனினும் காரணத்தை அப்போது கூறவில்லை.இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு, தனது வலைத்தளப் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “தான் விருப்ப ஓய்வு பெற்றதற்கு மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன்தான் காரணம்” என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
“என் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. என்னுடன் பணிபுரிவது அவருக்கு திருப்தியாக இல்லை. குறிப்பாக, ரிசா்வ் வங்கியிடம் உள்ளஉபரி தொகையை மத்திய அரசிடம் வழங்குவது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விவகாரங்களில் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரின் மனோபாவமும், பொருளாதார கொள்கை விவகாரங்களை அவர் அணுகிய விதமும் வித்தியாசமாக இருந்தது. முந்தைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை போல அல்லாமல் நிர்மலா சீதாராமன் வேறு விதமாகச் செயல்பட்டது- அவருடைய பொருளாதார கொள்கைஅணுகுமுறை, திறன் உள்ளிட்டவைஆரம்பத்தில் இருந்தே மாறுபட்டிருந்ததால் என்னால் அவரோடு பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டது. அவருடன் பணிபுரிவது எளிதாக இருக்கப்போவதில்லை என்பது அப்போதே தெரிந்து விட்டது.
அவரும், நிதியமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் ஜூன் மாதமே, என்னைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றுஅரசிடம் வலியுறுத்த ஆரம்பித்தார். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. பின்னர்தான் மின்சக்தித்துறைக்கு இடமாற்றம் செய்யப் பட்டேன்” என்று கார்க் கூறியுள்ளார்.“2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தன்னிடம் அரசோ அல்லதுநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, இந்தியாவை 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது பற்றி ஒருநாளும்பேசியதில்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக அபாய எல்லைக்குச் சென்றுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் நத்தை வேகத்தில் நகர்கிறது. உலக அளவில் இந்திய ஏற்றுமதி குறைந்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில், 1 சதவிகிதம் பேருக்குக் கூட வைரஸ்இல்லாத நிலையில், நாடு முழுவதும் 68 நாட்களுக்கு கடுமையானபொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டது-தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடியது- பொதுப் போக்குவரத்து முடக்கியது- லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறியது ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்து விட்டன” எனவும் கார்க் குறிப்பிட்டுள்ளார்.