திரிபுரா மாநில முதுபெரும் தலைவர் தோழர் பாஜுபான் ரியான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில முதுபெரும் தலைவரும், முன்னாள் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் பாஜுபான் ரியான், உடல் நலிவுற்று அகர்தலா, ஐஎல்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் 2020 பிப்ரவரி 21 அன்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவருக்கு வயது 79.
தோழர் பாஜுபான் ரியான், 2008இல் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில், கட்சியின் மத்தியக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2018இல் நடைபெற்ற 22ஆவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர், 1973இல் கட்சியின் திரிபுரா மாநிலக் குழுவிற்கும், 2002இல் மாநில செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருந்தார்.
தோழர் பாஜுபான் ரியான், திரிபுரா கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிகரற்றவராவார். பழங்குடியின மக்களுக்கு வன நிலங்களில் உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கான ஐமுகூ-1 அரசாங்கக் காலத்தில் வன உரிமைகள் சட்டத்தை வடிவமைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்தவர்களில் ஒருவராவார். இரு முறை திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், திரிபுரா இடது முன்னணி அரசாங்கத்தில் வேளாண் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய சமிதியின் நிறுவனத் தலைவருமாவார். மேலும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் கண முக்தி பரிஷத் ஆகியவற்றின் உன்னதமான தலைவர்களில் ஒருவருமாவார். அவரது மரணம், கட்சிக்கும் திரிபுரா கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களை அவருடைய குடும்பத்தாருக்குத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(ந.நி.