tamilnadu

img

பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவிப்பு

புதுதில்லி, ஆக. 31 - குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு திங்களன்று தண்டனை வழங்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்தத் தீர்ப்பின்படி பிரசாந்த் பூஷண்  ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறினால் மூன்று மாத காலம் சிறைத் தண்டனை அல்லது மூன்று வருட காலம் வழக்கறி ஞர் தொழிலுக்கு தடை விதிக்கப்படும். இதுபோல ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டு மென்கிற தீர்ப்பு. 1970ஆம் ஆண்டு கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரு மான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவருக்கு மூன்று மாதம் கால சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக செயல் பாட்டாளருமான பிரசாந்த் பூஷணை நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் குற்றவாளியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள், தண்டனை விதிக்கப்படும் முன்பாக, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண் தனது செயலுக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடி வெடுக்க அவகாசம் தருவதாக கூறியிருந்தனர்.ஆனால் பிரசாந்த் பூஷண் தமது கருத்து சுதந்திரத்தை வெளிப் படுத்திய விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அதில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார்.

அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த டுவிட்டர் சர்ச்சை தகவல் தொடர்பாக பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. முன்னதாக, ஜூன் 27-ஆம் தேதி “எதிர்கால வரலாற்றாய்வாளர்கள், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கை, மேலும் குறிப்பாக தலைமை நீதிபதிகளாக இருந்த நால்வரின் பங்கை  பார்ப்பார்கள்” என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சை டுவிட்டர் தகவல்கள் தொடர்பாக பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமது டுவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்றும், அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தனக்கு எதிரான மனுவை, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் பட்டியலில் சேர்த்த உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரலின் நடவடிக்கைக்கு எதிராக மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி, தகுதி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், தற்போது அவரது நடவடிக்கையைக் குற்றமாகக் கருதி அவரை குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையே,சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் பதிவிட்டிருந்த டுவிட்டர் பதிவுகள் இரண்டும் தற்போது சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதால் டுவிட்டர் நிறுவனம் முடக்கியிருப்பதாகக் கூறியுள்ளது.   இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.