உச்சநீதிமன்றத்தில் புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக நீபதிகளின் எண்ணிக்கை முழுமையடைந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஒரு தமைமை நீதிபதி மற்றும் 30 நீதிபதிகள் என மொத்தம் 31 என்ற எண்ணிக்கையிலான நீதிபதிகள் பணியாற்ற இந்திய அரசியலமைப்பு வழிவகை செய்கிறது. ஏற்கனவே தலைமை நீதிபதி தவிர்த்து 26 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நிர்வாக குழு மீதமிருந்த 4 நீதிபதி காலியிடங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்துள்ளது.
அதன்படி நீதிபதிகள் அனிருதா போஸ், ஏ.எஸ்.போபன்னா, பூசன் ராமகிருஷ்ண கவை மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவை தற்போது பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதி அனிருதா போஸ் தற்போது ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சூர்யகாந்த் தற்போது இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தற்போது கௌஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் செயல்பட்டு வருகிறார்.