ஜம்மு;
காஷ்மீரிகளுக்கு தேசியக்கொடி குறித்து பாடமெடுக்க ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கு தகுதியில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி சாடியுள்ளார்.
ஜம்மு பகுதியில் மேற்கொண்ட ஐந்துநாள் சுற்றுப் பயணத்திற்குப் பின்,மெகபூபா முப்தி செய்தியாளர்களுக் குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:காஷ்மீரில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் இங்கு பயங்கரவாதம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை எதிர்த்துப் பேசுபவர்களின் குரல்களை அடக்குவதால், வேறு வழியின்றி, ஏராளமான இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் சராசரியாக 10 முதல் 15 இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் இணைந்து வருகின்றனர்.போராடி சிறைக்கு செல்வதைவிட, பயங்கரவாத பாதையில் துப்பாக்கி தூக்கி, அதனால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று காஷ்மீர் இளைஞர்கள் நினைக்கின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுடனும், ஜம்மு - காஷ்மீரில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். நமது 20 வீரர்களை கொன்ற சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேசக்கூடாது?ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-ஆவது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு 2 வேளை உணவைக் கூட பாஜகவால் வழங்க முடியவில்லை. இவர்கள்தான் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனவாக்குறுதி அளிக்கின்றனர். வகுப்புவாத, வெறுப்பு அரசியல் மூலம் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை பாஜக திசைத் திருப்புகின்றனர்.
காஷ்மீரிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே 370 -ஆவது பிரிவு இருந்தது. நாட்டின் தேசியக்கொடியோ அல்லது ஜம்மு- காஷ்மீரின் கொடியோ எதுவாக இருந்தாலும் அது அரசியலமைப்பால் எங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், எங்களிடம் இருந்து அவர்கள் (பாஜக) அதை பறித்துக் கொண்டனர்.தற்போதைய காலம், பாஜக-வுக்கானதாக இருக்கலாம். ஆனால், நாளை எங்களுக்கான நேரம், காலம்வரும். அமெரிக்காவில் கடந்த வாரம்டிரம்ப்புக்கு என்ன நடந்ததோ அதேபோன்ற தேர்தல் முடிவு பாஜவுக்கு ஏற்படும்.நாட்டிலேயே மிகவும் ஊழல் மலிந்த கட்சி பாஜகதான். அதிகாரத்திலிருந்து செல்லும் முன்பே, தேசத்தின் அனைத்து வளங்களையும் விற்றுவிடமுயல்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்களை ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.அவர்களின் கடந்த கால சாதனையைப் பார்த்தால், ஊழலில் அனைவரையும் பாஜக மிஞ்சி விடும். எந்தவிதமான ஆதாரமும் இல்லாதவர் களுக்கு, இன்று மிகப்பெரிய கட்சி அலுவலகம் இருக்கிறது. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? கட்சியின் பெயரில் எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது?நாங்கள் ஜம்மு - காஷ்மீரின் மைந்தர்கள். இங்கு ஆயிரக்கணக் கான மக்கள் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் முயற்சியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள் ளார்கள். ஆனால், அரைக்கால் சட்டைஅணிந்து செல்லும் தலைவர்கள்(ஆர்எஸ்எஸ்-காரர்கள்) தேசியக்கொடியை அவர்களின் அலுவலகத் தில் பறக்க விட்டதில்லை. ஆனால், இன்று அவர்கள் தேசியக்கொடி குறித்து, காஷ்மீரிகளுக்குப் பாடம் நடத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஜம்மு - காஷ்மீர் கொடியும், தேசியக்கொடியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இரு கொடிகளையும் ஒன்றாகத்தான் நான் உயர்த்திப் பிடிப்பேன்’’. இவ்வாறு மெகபூபா முப்தி பேசியுள்ளார்.