அரியானா மாநிலத்தில் ஓராண்டாக கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணை அவரது கணவன் கழிவறையில் அடைத்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது நரேஷ் என்பவர் தன் மனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தன் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெளியில் எங்கும் உட்கார மறுத்து கழிவறையில் சென்று அமர்ந்திருந்ததாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறினார்.
ஆனால், அந்த பெண்ணிடம் பேசிய அதிகாரி ரஜினிகுப்தா அவர் மனநிலை பாதிப்பு இருப்பதாக தோன்றவில்லை என்கிறார்.