tamilnadu

img

நாடாளுமன்றத்தில் தில்லி வன்முறை குறித்து விவாதிக்க மறுப்பது மூர்க்கத்தனமாகும் - சிபிஎம்

தில்லின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்வதில் தோல்வி அடைந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற மிகவும் கொடூரமான மதவெறி வன்முறை வெறியாட்டங்களை விவாதித்திட மக்களவை மற்றும் மாநிலங்களவை தோல்வி அடைந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. மத்திய அரசின் நேரடிப் பொறுப்பில் சட்டம் – ஒழுங்கு இருந்துவரும் நிலையில் இவ்வளவு பெரிய அளவில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றிருப்பதை விவாதிப்பதில் தோல்வி என்பது அவமானகரமாகும். இவ்வன்முறை வெறியாட்டங்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பதும் இதுவரை தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வன்முறை வெறியாட்டங்கள் குறித்து மூன்று நாட்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸ் விவாதம் மேற்கொண்டுள்ள நிலையில், நம்முடைய நாடாளுமன்றம் இது குறித்து விவாதிப்பதில் தோல்வி அடைந்திருப்பது மானக்கேடாகும். நம்முடைய இறையாண்மைமிக்க நாடாளுமன்றத்தின், மிகவும் பெருமைமிகு நாடாளுமன்ற ஜனநாயகத்தின்  கடந்த எழுபதாண்டுகால வரலாற்றில், ஹோலி பண்டிகையைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் பொறுப்பாக இருந்திட மறுத்திருப்பது, மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
அதேபோன்று, இவ்வாறு நிலைமையைத் தட்டிக்கழித்திட இரு அவைகளின் தலைவர்களையும் இந்த அரசாங்கம் பொறுப்பாக்கியிருப்பதும் அவமானகரமான விஷயமாகும். ஒரு செயல்படும் ஜனநாயகத்தின் மக்களுக்கு இது ஏற்புடையது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.
 இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)