புதுதில்லி, மே 17- பிரக்யா சிங் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவைக் கொலை செய்வதாக சமூக ஆர்வலர் கைலாஷ்சத்யார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம்கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அண்மையில் கூறியிருந்தார். இதனைபாஜகவினர் பெரும் சர்ச்சையாக்கினார். குறிப்பாக, பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், ‘கோட்சே ஒரு தேச பக்தர்’ என்று பதில் கருத்து என்றபெயரில் புதிய சர்ச்சையையும் துவக்கிவைத்தார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததும், பிரக்யா சிங் தாக்குர் கருத்தை ஏற்கவில்லை என்றது பாஜக. பிரக்யா சிங்கும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வென்ற இந்திய சமூகஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.“கோட்சே, காந்தியின் உடலைத் தான் படுகொலை செய்தார். ஆனால்,பிரக்யா சிங் போன்றவர்கள் அவரது ஆன்மாவையும் கொலை செய்துவருகிறார்கள். அதனுடன் அகிம்சை,அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றையும் சிதைக்கிறார்கள்” என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். மேலும், “மகாத்மா காந்தி கட்சிகளுக்கும், அரசியலுக்கும் அப்பாற் பட்டவர்” என்று கூறியிருக்கும் சத்யார்த்தி, “பிரக்யா சிங் போன்ற நபர்களை, பாஜக உடனடியாக கட்சியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்;சிறு ஆதாயங்களுக்காக இவர்களை விட்டுவைப்பது ராஜ தர்மத்துக்கே எதிரானது” என்றும் தெரிவித்துள்ளார்.