tamilnadu

img

தில்லி கலவர பகுதிகளை பார்வையிட்ட  பி.ஆர்.நடராஜன், ஏ.எம்.ஆரிப் எம்பிக்கள்

தில்லியில் காவல்துறையின் ஆதரவுடன் குறிவைத்து முஸ்லீம்களின் உயிர்களும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலிஸ் தோல்விக்கு காரணமான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ராஜினமா நடவடிக்கையே பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ஆறுதல் அளிக்கும் என பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன். ஆழப்புலா எம்.பி ஏ.எம்.ஆரிப் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன், ஆழப்புலா நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் ஆகியோர் செவ்வாயன்று வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள காணொலி காட்சியில் கூறியிருப்பதாவது, கலவரம் நடைபெற்ற வடகிழக்கு டில்லியின் பலபகுதிகள் எரிந்து சாம்பலாகி உள்ளது. காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை. ஏனென்றால் எரிந்து சாம்பலான அப்பகுதியின் கோரம் வெளிஉலகம் தெரிந்துவிடக்கூடாது என அவர்கள் எச்சரிக்கையாய் அதனை மறைக்க முயல்கின்றனர்.
இப்பகுதியிலிருந்து ஒண்ணரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது. இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக அன்புடனும், சகோதரத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் எப்போதும் எந்த பகையும் இருந்ததே இல்லை என்பதை இவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிந்தது. பின்னர் எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது என்றால் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஆர்எஸ்எஸ். பஜ்ரங்தள் கிரிமினல்கள்தான் இப்பகுதிக்கு வந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு 16க்கு மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிவாசல்களை தகர்த்து எரித்துள்ளனர். எந்தவொரு இந்து கோவில்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆகவே திட்டமிட்டு இங்கு ஒரு கலவரத்தை உருவாக்கி மதப்பிரிவினை உருவாக்க வேண்டும் என்றே இக்கலவரத்தை செய்துள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே 1969களிலும் , குஜராத்தில் 2002 லும் நடந்த மதக்கலவரங்களை போல் இங்கும் கலவரத்தை நடத்த முயன்றுள்ளனர். இதனால் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் குறி வைத்து தகர்த்தும், எரித்தும் தங்களின்  வெறித்தனத்தை காட்டியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு சீக்கிய சகோதரர்கள் உடன் நின்று உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியும் வலுவான நிவாரணக்குழு அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இங்கு தற்போதும் மிகவும் மோசமான சூழல் நிலவி வருகிறது. நாங்கள் முன்னதாக நாடாளுமன்றத்தில் கூறியதுபோல இக்கலவரம் குறித்த நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவையான நஷ்ட ஈடு தரவேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் முழு பொறுப்பு காவல்துறையின் தோல்வியே ஆகும். காவல்துறையின் ஆதரவுடன் குறிவைத்து முஸ்லீம்களின் உயிர்களும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினமா செய்ய வேண்டும்  அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது என்பது இப்பகுதிக்கு வந்த பார்த்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என உணர்கிறோம். நாங்கள் இங்கு பார்வையிட வந்தபோது இந்து, முஸ்லீம், சீக்கியர் என எல்லா மதத்தினரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று எங்களிடம் நடந்தவைகள் குறித்து விளக்கினர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவை தெரிவித்தோம். உங்களோடு நிற்போம் என்கிற உறுதியையும் அளித்தோம் என்றனர்.