மதுரா :
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஈத்கா மசூதியை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு நெருக்கமான ரஞ்சனா அக்னி ஹோத்ரி உட்பட மற்றும் 5 வழக்கறிஞர்கள், இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், புதனன்று அவர்களின் மனுக்களை விசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி சாயா சர்மா, ‘இந்த மனுக்களை விசாரணை செய்வதற்கான முகாந்திரம் இல்லை’ எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளார். ஆகஸ்ட் 15, 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அதேநிலையில் நீடிக்கும் என ’மதவழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ கூறுவதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.