புதுதில்லி:
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 31 அன்று நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
இலவச கட்டாயக் கல்விஉரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் 112 நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்ட மத்திய ஆசிரியர் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்தத் தேர்வு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 31-ம் தேதி நடைபெறும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு வசதியாக, தேர்வு கூடுதலாக 23 நகரங்கள் சேர்த்துமொத்தம்135 நகரங்களில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு: https://ctet.nic.in/ இணையதளத்தில் பார்க்கலாம்.