tamilnadu

img

அச்சத்தை தூண்டுகிறார் மோடி? திரை பிரபலங்கள் கொந்தளிப்பு

மோடிக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் இருக்கிறது என்று திரை பிரபலங்கள் கொந்தளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்தை அடையாளப்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற என்று மணிரத்னம், ரேவதி, அபர்னா சென், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது. அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் கடிதம் எழுதிய 49பேர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து திரையுலகினர் செய்திநிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தனர். 
அதில் பேசிய பிரகாஷ்ராஜ்

‘கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும். மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இரு தரப்பின் கருத்துகளையும் கேட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார். கேள்வி கேட்பதால் எங்களை நீதிமன்றங்களில் நிறுத்த முடியும் என்றால் யாரும் உண்மையை பேச முன்வர மாட்டார்கள்’ என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனன் ‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு என்பது மிகவும் வருத்தமானது. கடிதம் எழுதுவதில் என்ன தேசதுரோகத்தை பார்த்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கூறும்போது ’பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஜனநாயக முறையிலும் நாகரீக முறையிலும் விடுக்கப்பட்ட கோரிக்கை. தங்களுடைய சமூக பொறுப்பை தான் அவர்கள் செய்தார்கள்’ என்று கூறி இருக்கிறார்.