புதுதில்லி:
இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த பேச்சுவார்த்தை செவ்வாயன்று மூன்றாவது ஆண்டாக தில்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரைபடங்கள், செயற்கைக்கோள் தரவுகள் உட்பட முக்கியமானவற்றைஇருநாடுகளும் பரிமாறிக்கொள்ளும். இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது; எதிரிகள் எந்த இடத்தில் இருந்துஎந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிற்கு கிழக்கு எல்லை அல்லது மேற்கு எல்லைகளில் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் இருந்தால், அதனை கண்டறிந்து துல்லிய மாக தாக்குதல் நடத்தலாம்.இதன்பின்னர் அமெரிக்க அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.