1 . ‘காலில் பிளேட் வைத்திருக்கிறேன்’
ஆர்.மகேஸ்வரி (45), பெரம்பலூர்
எங்கள் மாவட்டத்தில் பெண் வன்கொடுமைக்கு எதிராகவும் மதுபோதைக்கு எதிராகவும் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் மாநில அளவில் ஒரு கோரிக்கைக்காக பெண்கள் நானூறு கிலோமீட்டர் நடப்பதுஎன்பது புதிது. நான் வியப்படைந்து இதில் பங்கேற்க வேண்டும் என உறுதியோடு கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கான வேலை வாய்ப்பு தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஓரளவு கிடைக்கிறது. இதிலும் 12 அடி ஆழம் 27 அடி அகலம் வெட்டவேண்டிய பண்ணைக்குட்டையில் இயந்திரங்களை வைத்து குறைந்த அளவு தோண்டி விட்டு பணத்தை கொள்ளையடிக்கின்றனர். 92 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி வலது காலில் பிளேட் வைத்திருக்கிறேன். இருந்தாலும் மாதர் சங்கத்தின் கோரிக்கைகளின் வலுவால் நடைபயணத்தில் முழுமையாக பங்கேற்றுள்ளேன்.
2 . அப்பாக்களின் மகள்களது குரல்...
ப்ரியா (23), உத்திரமேரூர்
பல போராட்டங்களில் பங்கேற்று இருந்தாலும் இந்த நடைபயணம் தமிழகத்தின் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு மது மற்றும் பெண்கள் மீதான வன்முறை என்பது அதிகரித்துள்ள சூழலில் இந்த நடைபயணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. குடித்து குடித்து குடல் அழுகி இறந்துபோன பல அப்பாக்களது மகள்களின் குரலாக இதை நான் கூறுகிறேன். அவர்களின் மருத்துவ செலவுக்கு வாங்கிய கடன்களை அடைக்க இன்றைக்கு குடும்பத்தை சேர்ந்த பெண்களும், சிறுவர், சிறுமியரும் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம், படிப்பு, குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும் சீரழிகிறது. பெண்களுக்கான பிரத்தியேக உடற் சிரமங்களை எதிர்கொண்டு எங்கள் கோரிக்கையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து நடக்கிறோம்.
3. ‘50 டாஸ்மாக் கடைகளை மூட வைத்துள்ளோம்’
தமிழ்ச்செல்வி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்
போதையற்ற வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என உறுதியோடு மாதர் சங்கத்தின் சார்பில் கால்களில் கொப்புளங்களோடும், மன உறுதியோடும் நடந்து கொண்டிருக்கிறோம். எங்கள் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் இதுவரை 50 டாஸ்மாக் கடைகளை போராட்டத்தின் மூலம் மூடி உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இளம் சந்ததியினரின் மூளை செயல்பாட்டை முடக்குவதற்காகவே டாஸ்மாக்கை இலக்கு நிர்ணயித்து திறக்கிறது. இந்தியாவில் இளம் விதவைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. போதை கலாச்சாரம் பரவியுள்ளது. டீன் ஏஜிலேயே கஞ்சா அடிக்கும் மாணவர்களை பார்க்கமுடிகிறது. இதன் விளைவாக குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது, எனவே இதனை தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு நடக்கும் இந்த நடைபயணத்தில் வீரியத்தோடு முழுமையாக நான் பங்கேற்று வருகிறேன்.
4. தாலியை அறுக்கும் தமிழக அரசு
பி.கோமதி, திருவாரூர்
எங்கள் கால்கள் கொப்பளித்தாலும் மூட்டு வலியால் ஒடிவது போல இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பெண்களின் தாலியை அறுக்கும் தமிழக அரசின் மதுபான கொள்கைகளை எதிர்த்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நடைபெறும் இந்த நடைபயணம் வெற்றி அடைந்தே தீரும்.
5. கோரிக்கைகள் ஈர்த்தன
வள்ளியம்மாள், மீஞ்சூர்
பல சிறு தொழிற்சாலைகள் உள்ள எங்கள் பகுதியில் உள்ளன. இக்கம்பெனிகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நேரத்தில்தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இந்த நடைப்பயண கோரிக்கைகள் என்னை ஈர்த்தது. எனவே நான் பங்கேற்று உள்ளேன்.
6. ‘நீங்க ஜெயிக்கணும்னு வாழ்த்துறாங்க’
எஸ்.சூர்யா(22), கள்ளக்குறிச்சி
நான் பிஎஸ்சி படித்துள் ளேன். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையால் ஏராளமான ஆண்கள் குடித்துவிட்டு இறந்துள்ளனர். விதவைகளாக உள்ள இளம்வயதுப் பெண்களை பார்க்கிறேன். எனவே போதைப் பழக்கத்தை ஒழிக்க வலியுறுத்தும் இந்த நடை பயணத்தில் நான் பங்கேற்று உள்ளேன். நிதி வசூல் குழுவில் உள்ள நான் நிதி வசூலிக்கும்போது நன்கொடை அளித்த ஒரு அம்மா “என் வீட்டுக்காரர் குடிச்சே செத்துப் போனார். அதனால நீங்க ஜெயிக்கணும், மதுவை ஒழிக்கணும்” என கண்ணீர் மல்க கூறினார். அதேபோல டீக்கடை நடத்தி வந்த பெண்மணி ஒருவர் “கவர்மெண்ட் நஷ்டத்தில் போகுது” என கூறினார். நான் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கி கூறியபின் 50 ரூபாய் நன்கொடை கொடுத்தார்.
7. திருந்தவிடாமல் செய்யும் தமிழக அரசின் கபடத்தனம்
இ.அலமேலு, கள்ளக்குறிச்சி மாவட்டம்
25ஆம் தேதி கடலூரில் துவங்கிய நடைபயணத்தை வழிநெடுகிலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும், வாகனங்களில் சென்றவர்களும் வியப்போடு பார்த்துக் கொண்டு கடந்தனர். நாங்கள் வசூலில் கலந்து கொண்டபோது நிதி அளிக்க முன்வந்த டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், “வன்முறையற்ற தமிழகத்தை கேளுங்க; ஆனால் போதையற்ற தமிழகம் என்று கேட்காதீர்கள்; நாங்கள் மதுவில் இருந்து விடுபட நினைத்தாலும் எங்களால் இயலாத அளவிற்கு அடிமையாகி உள்ளோம்” என கூறியதை கேட்டு அவர் மீது பரிதாபப்பட்ட அதே வேளையில் தமிழக அரசின் மீது கடும் கோபமும் ஏற்பட்டது. இதேபோல திருமணம் ஆகாத ஒருவர் எங்களுக்கு நிதியளிக்க வந்தபோது இந்த குடிப்பழக்கத்தால்தான் எனக்கு பெண் கிடைக்கவில்லை என கூச்சத்துடன் கூறினார். இது தவறை உணர்ந்தவர்களை திருந்த விடாமல் செய்யும் தமிழக அரசின் கபடத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. பெண்கள், மாணவிகள் மத்தியில் இந்த நடை பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல கடைகளில், வீடுகளில் நோட்டீஸ் கொடுக்கும்போது எதற்காக இந்த பிரச்சார நடைபயணம் என்பது அவர்களுக்கு புரிந்தது என்பது கூடுதல் பலனாகும்.
8. டாஸ்மாக் கடையை உடைப்போம் என்றும் போகும் போது...
ஏ.சரஸ்வதி, மதுரை மாநகர்
உழைப்பாளி மக்களை போதைக்கு அடிமையாக்கி ஊழல் புரிந்து வரும் தமிழக அரசிற்கு எதிராக, போதை மற்றும் வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உறுதியோடு எங்கள் நடைபயணம் தொடர்கிறது. மதுரையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பல மதுக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தி உள்ளோம். சில நேரங்களில் கடையை உடைப்போம் என்று கடுமையான கோபத்துடன் செயல்பாட்டில் இறங்க முயலும்போது காவல்துறையினர் சமாதான உடன்படிக்கைக்கு வந்து கடையை அப்புறப்படுத்திய சம்பவங்களும் உண்டு. தொடர்ச்சியாக தியாகி லீலாவதியின் பாதையில் குடிநீர், ரேஷன்கடை பிரச்சினைகளில் தலையிட்டு போராடி வருகிறோம்.
9. பாலியல் குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஆளுங்கட்சி
பத்மாவதி, ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம் பகுதியில் சிவசங்கரி என்ற மனநலம் குன்றிய பெண்ணை அவருடைய பெரியப்பாவான அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் செய்த கணவன் விட்டுச்சென்ற கொடுமையை தாங்கி தாய் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த அப்பாவிப் பெண் ரத்த சொந்தத்தாலேயே வன்முறைக்கு ஆளான கொடுமை எங்கள் மாவட்டத்தில் நடந்தது. இதற்கு எதிராக இரண்டு முறை தொடர் போராட்டம் நடத்தி உள்ளோம். ஆளுங்கட்சியின் பாதுகாப்பால் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. போதை கலாச்சாரமும், பெண்கள் போகப்பொருளாக இச்சமூகத்தில் கற்பிக்கப்படுவதும் தந்தையே மகளை வன்முறைக்கு ஆளாக்கும் நிலை ஏற்பட காரணமாகும்.
10 . புதுச்சேரி ஆளுநருக்கு எதிராகவும் கோஷம்
சத்யா, புதுச்சேரி
புதுச்சேரி மாநிலமே எதற்கு பிரபலம் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். இந்நிலையில் போதையை எதிர்த்து இந்த நடைபயணம் என்பதே எங்களுக்கு புதுமையான விஷயம்தான். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ரேஷன் கடைகளில் பொருட்களை தருவதை நிறுத்தி விட்டு பணம் தர சொல்லி உத்தரவு போடுகிறார். ஏற்கனவே மூன்று அரசு பஞ்சாலைகள் மூடிக் கிடக்கும் நிலையில் வருமானம் இல்லாத மக்களிடம் வெளியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சொல்வது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் இந்த கோரிக்கையோடு சேர்த்து போராடுங்கள் என வழி நெடுக பெண்கள் கூறுகின்றனர். மேலும் புதுச்சேரியில் பாலியல் புகார் கமிட்டி கிடையாது. இதனை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனையும் வலியுறுத்துகிறோம்.
11 .பூத்தூவி வரவேற்ற ஆண்கள்
வி.மேரி, கடலூர்
கால்வலி, கொப்புளம் போன்ற பல வலிகளையும் தாங்கிக்கொண்டு பயணக்குழு பெண்கள் நடந்து வருகின்றனர். கோரிக்கைகளின் வலு என்பது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளும் எங்களுடன் இக்கோரிக்கை வெல்லவேண்டும் என்ற கோஷத்துடன் ஆடிப்பாடி பிரச்சாரத்தில் ஈடுபட்டது இதற்கு ஒரு உதாரணம். அதையும் தாண்டி ஒலிபெருக்கியிலும் அவர்கள் பேசினர். இந்த நடை பயணத்தின் நோக்கங்கள் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களையும் ஈர்த்துள்ளது என்பது கடலூர் மாவட்டத்தில் கட்டிடங்களில் இருந்து எங்கள் மீது பூத்தூவியும், குழந்தைகள் வரவேற்பளித்ததும், என்எல்சியில் பணிபுரியும் நெய்வேலி தொழிலாளர்கள், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என அனைத்து இடங்களிலும் சகோதர அமைப்புகள் சார்பிலும் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுத்திலிருந்தே தெரிகிறது.
12 . குடிப்பழக்கம், பெரும் எதிரி
கே.ஆஷா (25), தென்சென்னை
நடை பயணத்தின் போது புதுச்சேரி பெரியார் சிலை அருகே என்னிடம் வந்த ஒரு பெண்மணி எங்கள் பகுதியில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது எனக் கூறினார். நான் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி அவர்களின் செல் நம்பரை கொடுத்து பேசச் சொன்னேன். வில்லியனூரில் கடை வைத்துள்ள 47 வயதுடைய பெண்மணி “என் கணவர் இந்த குடிப்பழக்கத்தால் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று முதல் பல சோதனைகளை எதிர்கொண்டு பிழைத்து வருகின்றேன்” என கூறிக்கொண்டே நன்கொடை கொடுத்தார். இந்த அனுபவமும் போதையற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை என்னிடம் உருவாக்கியது.
13. ‘கால்கள் கெஞ்சுகின்றன’
ஏ.தேவி(32), கள்ளக்குறிச்சி
எங்கள் நடை பயணத்திற்கு இயற்கையே அவ்வப்போது சாரல் மழையாக தூறலுடன் வரவேற்பு அளித்து வருகிறது. நடைப்பயணத்தில் ஐந்து தினங்களாக நாங்கள் நடந்து வரும்போது புதுச்சேரியில் நூலகத்தையோ, ரேஷன் கடையையோ காண முடியவில்லை. ஆனால் வீதிக்கு 4 மதுக்கடைகளையும், அதனை வாங்க வயது வித்தியாசமில்லாமல் நிற்பவர்களையும் கண்டு வேதனை அடைந்தோம். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெய்யும் சாரல் மழையையும் தாங்கி, குண்டும் குழியுமான சாலைகளையும் கடந்து இவர்களுக்காக நாம் போராடுகிறோம் என்ற சூழலில், மத்திய, மாநில அரசுகள் எதிர்கால சமூகத்தை நாசப்படுத்திடும் செயலை எதிர்த்து இந்த நடைபயணம் வெற்றி அடைந்தே தீரும். எங்கேயாவது சற்று உட்கார முடியுமா என்று கால்கள் கெஞ்சினாலும் கோரிக்கையின் வீரியங்கள் எங்களை நடக்க வைக்கிறது.
14. இரண்டு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு
சித்ரா(26), திருவள்ளூர்
என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்த என்னுடைய சொந்த அனுபவமே வித்தியாசமானது. விலைவாசி உயர் வினால் வருமானம் ஈட்ட முடியாத என்னுடைய கணவர் எப்படி பெரியவர்கள் முன்பு திருமணம் செய்தாரோ, அதைப்போலவே பெரியவர்கள் முன்பே என்னையும் எங்களுடைய இரு குழந்தைகளையும் கைவிட்டு என்னால் இனி குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்று இயலாமையோடு கூறிவிட்டு சென்றுவிட்டார். 11வயது, 7 வயது உள்ள இரண்டு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு உழைத்து வருகிறேன். காலையில் தீக்கதிர் பத்திரிகையை வீடு வீடாக விநியோகம் செய்துவிட்டு வேலைக்கும் சென்று இரவு 9 மணிக்கு திரும்புகிறேன். எங்கள் மாவட்டத்தில் ஆழ்துளை போர் போட்டு குடிநீர் பிரச்சனையை தலை விரித்தாட வைத்த ஏராளமான கம்பெனிகளை மாதர் சங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் மூட வைத்துள்ளோம்.. போதை பழக்கத்தால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகிறது. படிப்படியாக தமிழகத்தை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
15 . நாங்கள் சிறைக்கும் சென்றோம்...
வனஜா, திண்டுக்கல்
எங்கள் மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. குடிப் பழக்கத்தினால் குடும்பங்கள் சிதைந்து வரும் நிலையில் ஆத்தூர் ஒன்றியம் செந்தரையூர் என்ற ஊராட்சியில் பள்ளி, கோயிலுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை மூட தொடர் போராட்டங்கள் மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதன் விளைவாக கடை அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது எங்கள் மீது போடப்பட்ட வழக்கால் நாங்கள் சிறைக்கும் சென்றோம். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. மக்களுக்கான நலன்களை செயல்படுத்திட அரசை வலியுறுத்தி நடைபெறும் நடைபயண இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்று உள்ளோம்.
16. யாரைத் தொடர்பு கொள்ள...
உஷா (50), தென் சென்னை
பிறக்கும் பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலை தமிழகத்தில் பரவி வருகிறது. எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் போதைப் பழக்கத்தால் இது மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் இந்த நடைபயண பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீடாக, கடையாக துண்டுப்பிரசுரம் கொடுத்து செல்கிறேன். பாதிக்கப்பட்ட பல பெண்கள் என்னிடம், இந்த அமைப்பை எங்கள் பகுதியில் உருவாக்க யாரை தொடர்பு கொள்வது என கேட்டனர். நான் மகளிர் சிந்தனை புத்தகத்தின் முகவரியை கொடுத்து இதை தொடர்ந்து படித்து வாருங்கள். அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள முடியும் என கூறிவிட்டு வந்தேன்.
17. சில ஆண்களின் ஏளனப் பேச்சு
கற்பகம்(38), கடலூர்
இந்த நடைபயணத்தை வழியில் பார்க்கும் சில ஆண்கள் “இவங்க போய் என்னத்த தடுத்து நிறுத்த போறாங்களோ” என்று ஏளனமாக கூறிய சம்பவங்கள் உண்டு. அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நல்ல வரவேற்பு என்பது அனைத்து தரப்பு மக்களிடமும் வெளிப்பட்டது. இது எங்களுக்கு புது அனுபவம். மழையிலும் நாங்கள் உறுதியோடு மது அரக்கனை ஒழித்துவிட வேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து நடந்தோம். அதே போல தினசரி பல இடங்களில் பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
18 . நீதியை விளக்கிய நிதிக் குழு
நடைபயண ஊர்வலத்தில் நடந்து செல்லும் பெண்களின் அனுபவங்கள் ஒருபுறமிருக்க இதில் பங்கேற்று நடைபயண செலவுகளுக்கான தொகைகளை பொதுமக்களிடம் வசூலிக்கும் வகையில் ‘நிதிக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் இக்குழு நிதி திட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது. உண்மையில் தினசரி மற்ற தோழர்களை விட நிதி வசூல் பணியில் ஈடுபட்டிருந்த இந்த தோழர்கள் தினசரி குறைந்தது 3 கிலோ மீட்டர் அளவிற்கு கூடுதலாக நடக்கின்றனர். மேலும் வீடு வீடாகச் சென்று நிதி கேட்பது கடைகளில் படிகள் ஏறிச் சென்று நிதி வசூலிப்பது, அவர்களின் கேள்விகளுக்கு விளக்கங்கள் கூறுவது என குறிப்பிடத்தக்க பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தகுந்தது. மேலும் நிதி கொடுக்கும் சிலர் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தாலும்கூட, “எங்கள் குடும்பமே என்னுடைய இந்த பழக்கத்தால் பாதிக்கப்படுகிறது; உங்களின் முயற்சியை வாழ்த்துகிறேன்” என கூறி நிதி அளித்த பல வித்தியாசமான அனுபவங்களும் இவர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் நடைபயண குழுவினருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில், அதில் அளிக்கப்படும் உபசரிப்புகளில் இவர்கள் பங்கேற்க இயலாவிட்டாலும் உற்சாகமாக நிதி வசூலிக்கின்றனர். இதேபோல் நடை பயணத்திற்கு முன் துண்டுப் பிரசுரத்தை அனைவரிடம் கொடுத்துக் கொண்டே செல்லும் தோழர்களின் பணியும் குறிப்பிடத்தக்கதாகும்.