திருச்சூர்:
கேரளாவின் திருச்சூரில் சிபிஎம் புதுசேரி கிளை செயலாளர் பி.யூ.சனூப் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சங்பரிவாரைச் சேர்ந்த நந்தனன் (50) கைது செய்யப்பட்டார்.
கொலை நடந்தபோது இடது கையில் காயம் ஏற்பட்ட நந்தனன், திரிச்சூரில் உள்ளஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சனூப்பை மார்பில் குத்தி வீழ்த்தியதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைக் கும்பலைச் சேர்ந்த அரணம்கோட்டை அபய்ஜித் மற்றும் மரியான் என்கிற சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் ஆணையர் ஆர். ஆதித்யா கூறினார்.
குன்னம்குளம் ஏ.சி.பியான டி.எஸ்.சினோஜ் தலைமையிலான குழுவினர் நந்தனனை கைது செய்தனர். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்தவர் என்பதால் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நந்தனனுக்கு எதிராக லுக் அவுட் அறிவிப்பு வெளியிடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது மனைவியின் வீட்டில் சோதனை நடத்தி அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கொலை நடப்பதற்கு முன்பு சிபிஎம் ஊழியரான மிதுனுடன் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மிதுனை மீட்டு அவரது வீட்டில் கொண்டுவிட இரவில் இருசக்கர வாகனத்தில் சனூப் சென்று கொண்டிருந்தார். சிட்டிலங்காட்டில் தடுத்து நிறுத்தி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த விபின் (28), மட்டில் ஜிதின் (25), அபிஜித் ஆகியோரும் காயமடைந்தனர். கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.