tamilnadu

img

சிவப்பு புத்தகத்துடன் முன்னேறுவோம்! - பேரா.விஜய் பிரசாத்

முதன்மை ஆசிரியர், லெப்ட் வேர்டு புக்ஸ்; சர்வதேசப் பத்திரிகையாளர், இந்திய வரலாற்றியலாளர்.

1848 பிப்ரவரி 21 அன்று மாமேதை மார்க்சும், ஏங்கெல்சும்  தங்களது “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யின் முதலாவது பதிப்பை லண்டனில் வெளியிட்டார்கள்.  இந்த நூல் இப்போது கிட்டத்தட்ட உலகின் அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறுகிறது. நமது காலத்தில் மிக மிக அதிகமாக வாசிக்கப்பட்ட வெகுசில நூல்களில் இது ஒன்று. மார்க்சின் மூலதனம் நூலின் தொகுதி 1, ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால்  2013ல் உலக நினைவுத்திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் ஒரு முக்கிய ஆவண மாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மனிதகுலத்தின் பாரம்பரிய பெருமித மாக உள்ள மார்க்சின் படைப்புகளை பாதுகாப்பது என்பதை தவிர்க்க முடியாமல் முதலாளித்துவ உலகம் செய்கிறது.

பிப்ரவரி 21க்கு முந்தைய நாள் - பிப்ரவரி 20 என்பது சமீபகால இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஆகும். முதுபெரும் கம்யூனிஸ்ட் அறிஞர் தோழர்  கோவிந்த் பன்சாரே, வலதுசாரி பாசிச சக்திகளால் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாள். தோழர் கோவிந்த் பன்சாரே மகாராஷ்டிர  மாநிலத்தில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தவர். 1952ல், அவரது 19ஆவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். மார்க்சிய தத்துவார்த்த நூல்களை யும், சோவியத் நாவல்களையும் அன்றைய தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே தீவிரமாக வாசித்தவர் அவர். 1987ல் அவர் வெளியிட்ட சிவாஜி யார் என்கிற நூலை சில ஆண்டுகளுக்கு முன்பு லெப்ட் வேல்டு புக்ஸ் நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தோம். தோழர் பன்சாரே அவர்கள், 17ஆம்  நூற்றாண்டு மாவீரனான சிவாஜியை, தனது நூலின் மூலம், வலதுசாரி மதவாத சக்திகளிடமிருந்து விடுதலை செய்தவர். மாவீரன் சிவாஜி, முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு இந்து வீரன் என்பதாக வலதுசாரி சக்திகள் கூறிக்கொண்டி ருந்ததை தனது நூலின் மூலம் உடைத்து நொறுக்கியவர் தோழர் பன்சாரே. அவர் படுகொலை செய்யப்பட்டது இந்திய இடதுசாரி ஊழியர்களிடையே, இடது எழுத்தாளர்களிடையே, இடது செயற்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பன்சாரே போலவே, உலகின் பல பகுதிகளிலும் இடதுசாரி சிந்தனை யாளர்கள், கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் வலதுசாரி சக்திகளாலும் முதலாளித்துவ - பாசிச கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படு வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தோழர்களை கொல்வதோடு மட்டுமல்ல, இடதுசாரி புத்தக நிலையங்களை அடித்து நொறுக்குகிறார்கள். இடதுசாரி வெளியீட்டாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  அமெரிக்காவில், பிரிட்டனில், இந்தியாவில், பிரேசிலில் என எல்லா இடங்களிலும் இது நடக்கிறது.

பகுத்தறிவுவாத, முற்போக்குவாத, இடதுசாரி சிந்தனை மீது கொடூரமான வன்முறையையும் தாக்குதலையும் ஏவி மவுனமாக்கிவிட முடியும் என்று முதலாளித்துவ - பாசிச சக்திகள் எண்ணுகின்றன. நவீன பாசிச அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள், தோழர் பன்சாரே போன்ற கம்யூனிஸ்ட் அறிஞர்களை அழிப்பதன் மூலம் அவர்களது சிந்தனைகளை முடக்கிவிட முடியும் என எண்ணுகின்றனர். தோழர் பன்சாரே உயிர்பிரிந்த மறுநாள் பிப்ரவரி 21. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட தினம்.  இந்தியாவின் மாபெரும் இடதுசாரி புத்தக நிறுவனங்களில் ஒன்றான லெப்ட் வேல்டு புக்ஸ் நிறுவனத்தில் நாங்கள் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நவீன பாசிஸ்ட்டுகள் நம்மை மிரட்டுகிறார்கள். இடதுசாரி எழுத்தாளர்களை, புத்தக  வெளியீட்டாளர்களை, புத்தக விற்பனையாளர்களை வன்முறை மூலம் ஒடுக்கிவிட முனைகிறார்கள். நாம் அமைதியாக இருந்துவிடப்போகிறோமா என்ற சிந்தனை எழுந்தது. இல்லை, வீறுகொண்டு எழுவோம், வீதி வீதியாக நமது நூல்களை கொண்டு செல்வோம் என உறுதியேற்றோம்.

உலகெங்கிலும் உள்ள புத்தக வெளியீட்டுத் துறையில் நமது நண்பர்களுடன் ஆலோசித்தோம். பிப்ரவரி 21 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட தினம் என்பதால், உலகம் முழுவதிலும் பொது வெளியில் இந்த நூலை கொண்டு செல்வதே  நமது மாபெரும் தத்துவார்த்த பிரச்சாரத்தின் வீச்சுக்கு அடிப்படையாக அமை யும் எனத் தீர்மானித்தோம். மக்கள் அவரவர் மொழியில் கம்யூனிஸ்ட் அறிக்கையை படிக்க வைக்க இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என தீர்மானித்தோம். இப்படித்தான் துவங்கியது சிவப்புப் புத்தகப் பயணம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் இந்த மகத்தான சிவப்புப் புத்தகத்தை ஒவ்வொருவரையும் வாசிக்க வைப்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.

உலகம் முழுவதிலும் இதற்கான அறைகூவலை விடுத்தது முதல் பல்வேறு இடங்களில் இருந்து உற்சாகமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கிழக்கு ஆசியா முதல் தென் அமெரிக்கா வரை 2020 பிப்ரவரி 21 (இன்று) ஆயிரமாயிரம் இடங்களில் சிவப்புப் புத்தக வாசிப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 2020 உடன்  இது நிற்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பாரதி புத்தகாலயம், கம்யூனிஸ்ட் அறிக்கையை தோழர் மு.சிவலிங்கம் அவர்களது தமிழ் மொழிப்பெயர்ப்பாக வெளியிட்டுள்ளது. பத்தாயிரம் இடங்களில் சிவப்புப் புத்தக  வாசிப்பு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் பிரஜாசக்தி,  தெலுங்கானாவில் நவதெலுங்கானா புத்தக நிறுவனங்கள் தோழர் ஏ.காந்தியால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அயர்லாந்தின் டப்ளின் நகரத்திலும் ரஷ்யாவில் மாஸ்கோவிலும், இந்தியாவின் மேகாலயாவிலும், பாகிஸ்தானில் லாகூரிலும், தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கிலும்... இன்னும் ஏராளமான நகரங்களில் கம்யூனிஸ்ட்  அறிக்கையை மக்களிடம் எடுத்துச் செல்லும் பேரியக்கமாக சிவப்புப் புத்தகப் பயணம் நடைபெறுகிறது. 

சிவப்பு சிந்தனையாளர்களின் உயிரைப் பறித்து அவர் களது குரலை ஒடுக்குவது துயரகரமானது. பன்சாரேவைப் போல ஹோண்டுரஸ் பகுத்தறிவு சிந்தனையாளர் பெர்ட்டா காக்கரஸ், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கிறிஸ் ஹனி, துனிசிய கம்யூனிஸ்ட் தலைவர் சோக்ரி பெலாய்டு, பிரேசில் சோசலிஸ்ட் தலைவர் மரில்லே பிராங்கோ, இந்தியாவில் பன்சாரே... என கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டாலும்  அவர்கள் உயர்த்திப்பிடித்த கம்யூனிஸ்ட் அறிக்கை இதோ மீண்டும் மீண்டும் முன்னேறு கிறது. நமது புத்தக அலமாரியிலிருந்து பிப்ரவரி 21 அன்று  மீண்டும் வாசிப்பதற்காக கம்யூனிஸ்ட் அறிக்கை நூலை  கையிலெடுக்கும்போது அந்த அலமாரியில் சப்தர் ஹஸ்மியும், ஹசன் நசீரும், மகதி அமெல்லும் விக்டர் ஜாராவும், ரூத் பர்ஸ்ட்டும் போன்ற எண்ணற்ற கம்யூனிஸ்ட் தியாகிகள் முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். நாம் உருவாக்க வேண்டிய புதிய உலகுக்கு அவர்கள் வழிகாட்டுகிறார்கள். பசியும், எழுத்தறிவின்மையும் இல்லாத ஓர் உலகம்; மருத்துவ சிகிச்சையும் முதியோருக்கு ஆதரவும் எப்போதும் கிடைக்கும் ஓர் உலகம், வேலைநேரத்திற்கு இணையான ஓய்வு நேரமும், இன்னபிற வசதிகளும் எல்லோருக்கும் கிடைக்கும் ஓர் உலகம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாயிலாக நம் கண்முன்னே விரிகிறது.

இன்றைய உலகில் இவையெல்லாம் கற்பனையான சிந்தனைகளாகத்தான் இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள ஒட்டுமொத்தப் பெண்களும் பெற்றிராத அளவிற்கு ஒப்பான செல்வத்தை உலகின் வெறும் 22 நபர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள். பசியும் வறுமையும் தாண்டவமாடு கிறது. நாம் வாழும் உலகின் இன்றைய எதார்த்தம் இதுதான்.  சகிப்பின்மை நிறைந்த உலகம் இது. ஆனால் இந்த உலகம் நிச்சயம் மாறும் என்ற உந்துதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை. அதைக் கைக் கொள்வோம். சிவப்புப் புத்தகத்துடன் முன்னேறுவோம்.

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்