tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

உறவுகளில் முறிவு

மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களின் பின்னணியில், இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னும், துவங்கிய பின்னும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் முறிவு ஏற்பட துவங்கியது. கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் உள்பட சில மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் மட்ட அளவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கிளைகள் தங்களை தாங்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிக் கொண்டன. இதுபற்றி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வரலாற்றாளர்கள் அவதூறு செய்யும் விதத்தில் எழுதினார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு அக்கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பழி சுமத்தினார்கள். அப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ‘ஊடுருவியதாக’ அவதூறு செய்யப்பட்டு பழிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த நிலையில், அது தொடர்பான உண்மைகளை நான் சொல்ல வேண்டும். 1934 அக்டோபரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அகில இந்திய இணைச் செயலாளர்களில் நானும் ஒருவன். மாசானி, கோரே மற்றும் கவுதம் ஆகிய மூவர் மற்ற இணைச் செயலாளர்கள் ஆவர்.

அதேபோல பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் கேரளாவிலிருந்து கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.கோபாலன் ஆகியரோடு நானும் கலந்து கொண்டேன். உண்மையில் எங்களில யாரும் அதற்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப் பெற்றவர்கள் அல்லர். எனவே, “ஒரு கம்யூனிஸ்ட்டான இஎம்எஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ஊடுருவ அனுமதிக்கப்பட்டுவிட்டார்” என்ற கேள்விக்கே இடமில்லை.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பம்பாய் மாநாடு நடந்து ஓராண்டுக்குப் பிறகுதான் தோழர் கிருஷ்ணப்பிள்ளையும், நானும் தோழர் சுந்தரய்யா மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதல் தொடர்பு கிடைக்கப் பெற்றோம். இந்த முதல் தொடர்பு கிடைக்கப் பெற்று சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் 1937 ஆம் ஆண்டில், கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டது.

இந்த ஒட்டுமொத்த காலக்கட்டத்திலும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் சோசலிசத்திற்காகவும், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளையும் உருவாக்குவதற்காகவும் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியை ஒரு முற்போக்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாக வளர்த்தெடுக்கும் நோக்கத்துடனும் மிகவும் நேர்மையான, பற்றுறுதி மிக்க ஊழியர்களாகவே செயல்பட்டார்கள். கேரளத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட உறுதிமிக்க பணியினால்தான் அங்கு தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்தன; இந்தப் பணிகள்தான் எங்களை கேரளத்தின் தலைவர்களாக வளர்த்தெடுத்தன. அதனொரு பகுதியாகத்தான் நாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக செயல்பட்டோமே தவிர; கேரளத்தில் தொழிற்சங்கமும், விவசாயிகள் இயக்கமும் வளர்ந்ததே தவிர, தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்ப்பாளரான மாசானி மற்றும் கும்பலின் கருணையினால் அல்ல. இதனொரு பகுதியாகத்தான், நான் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் கூட.

இன்னும் சொல்லப்போனால், தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, ஏ.கே.கோபாலன் மற்றும் நான் ஆகிய மூவரும் எங்களது சொந்த உரிமையின் அடிப்படையிலேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களாக இருந்தோமே தவிர ஜெயப்பிரகாஷ் நாராயணனாலோ அல்லது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு “வரலாற்றாளர்கள்” குறிப்பிடுவது போல மக்களை நம்ப வைப்பதற்காக வேறு சிலராலோ கட்சிக்குள் கொண்டுசெல்லப்பட்டவர்கள் அல்ல. அப்படியானால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஏன் ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது? ஏனென்றால், கேரளத்தின் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், சோவியத் ஒன்றியம் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொண்ட மிகப்பிரம்மாண்டமான நடவடிக்கைகளால் உளப்பூர்வமாக ஈர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இயல்பாகவே, ரஷ்யாவின் சோசலிசப் புரட்சியானது இந்தியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டுகிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்; பிற நாடுகளைப் போலவே விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இந்தியப் புரட்சியாளர்களுக்கு அதுவே சிறந்த பாதை என்று எண்ணினார்கள். எனவேதான் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காங்கிரஸ்காரர்களில் முதல் குழுவாக இருந்தார்கள்; தங்களது இறுதி இலக்கு சோசலிசமே என்று பிரகடனம் செய்து அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். உண்மையில் இந்தக் குழுவிற்கு தலைவர்களாக இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனும், மாசானியும் மற்றவர்களும்தான் என்பது ஒரு நகைமுரண்.

இங்கே மற்றொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். உண்மையில் கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பே சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கிடைக்கப்பெற்றிருந்தார்கள். அவர்கள் அந்தக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தவரை, மாசானி மற்றும் கும்பலைப் போல பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல; பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியும் ‘சோசலிசம்’ பேசியது; ஆனால் அது பேசிய ‘சோசலிசம்’ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மற்றும் சோவியத் எதிர்ப்பு உணர்வுகளை உள்ளடக்கியது.

- தொடரும்...