tamilnadu

img

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் கபசுர குடிநீர்.... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

புதுதில்லி:
கொரோனா தொற்று சிகிச்சையில் கபசுர குடிநீர் நம்பிக்கையூட்டுகிறது என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு  மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இத்தகைய பதிலை அளித்துள்ளார்.

சுமார் 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடிநீரும் நில வேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டமையும், அதில் ஒன்பது விதமான நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு, நான்கு வகையான முதல் கட்ட அடிப்படை ஆய்வுகள் மூலம் சித்த மருந்தான கபசுரக் குடிநீர் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், கோவிட் நோயில் நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்ந்து அறிந்திருப்பதை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் தன் பதிலில் கூறியுள்ளார். 
மேலும் இக்குடிநீர் இரத்த உறைதலை தடுப்பதிலும், ரெடெம்சிவீர் (Redemsivir) முதலான மிக முக்கிய நவீன ஆண்டி வைரஸ் மருந்துகள் செயல்படுவது போல கபசுரக் குடிநீர் செயல்பட வாய்ப்பிருப்பதை முதல் நிலை ஆய்வுகள் அறிவித்திருப்பதைத் தெரிவித்துள்ளார்.

ஆயுஷ் துறை எடுத்த நடவடிக்கை என்ன?

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்வியும் அமைச்சர் அளித்த பதிலின் முழுவிபரம் வருமாறு: 

கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய ஆயுஷ் துறை அதில் எந்தெந்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன? பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும்  கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மீது மேலாய்வுகள் செய்வது, முழுமையான ஆண்டி கோவிட் மருந்துகளை உருவாக்கும் ஆய்வுகள், அலோபதி-ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சை ஆய்வுகள் என்ன அளவில் நடைபெற்றுவருகின்றன? ஆயுஷ் துறை இதில் இதுவரை எடுத்துள்ள ஆய்வு நடவடிக்கைகள் என்ன? என்று சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி எழுப்பினார்.இதற்கு அமைச்சர் அளித்த பதிலில்,  தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல சித்த மருந்துகளைக் கொண்டு கோவிட் 19  நோயை கையாண்டு வருவதை மத்திய அரசு நன்கு அறியும் . மத்திய ஆயுஷ் துறையானது, சித்த மருத்துவர்களுக்கு கோவிட் நோய்க்கான சித்த மருத்துவ வழிகாட்டுதல் அளித்தும், சித்த மருந்துகளின்  மீது ஆய்வுகள் நடத்த அனைத்து ஊக்குவிப்பும் செய்தும் வருகின்றது . மத்திய சித்த ஆராய்ச்சி நிலையமும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முழுவீச்சில் பலகட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.இஎம்ஆர் வழியாக பிற ஆய்வு நிறுவனங்கள் கோவிட்- 19 நோயில் சித்த மருந்துகளில் ஆராய்ச்சி செய்யவும் பரிந்துரைகள் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் 29 சித்த மருத்துவ கோவிட் கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 16,563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கோவிட் நோய்க்கு  சிகிச்சை பெற்றுள்ளனர். சுமார் 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநயோகிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 395 பேருக்கு கபசுரக் குடிநீரும் ஒரு கோடியே 32 லட்சத்து 53 ஆயிரத்து 115 பேருக்கு நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவக் கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.

ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம் முதலான மருந்துகள் கோவிட் 19 நோயின் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மருந்துகள் மீது பல “கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள்”,  அதாவது நோயாளிகளிடமும் - நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போது நடத்தப்பட்டு வரும், நடந்து முடிந்த ஆய்வுகளின் விபரங்கள் பின்வருமாறு:

முன்கூட்டியே ஆய்வுகள்: 1. மூலிகை மருந்துகள் மீதான உயிர் கணினி தகவல் தொழில் நுட்ப ஆய்வுகள் (Docking studies).  2. நோய் எதிர்ப்பாற்றல் செய்கை ஆய்வுகள் ( Immuno modularity studies). 3. இரத்த உறைதலைத் தடுக்கும் செய்கை (Thrombolytic studies).வைரஸ் தடுப்பு ஆய்வு: ஆங்கில மருந்தான ரெடெம்சிவிர் போன்றே வைரஸ் பரவுதலைத் தடுக்கும் ஆற்றல், சித்த மருந்தான கபசுரக் குடி நீருக்கு இருப்பதை அறியும் ஆய்வு. இந்த ஆய்வில் கபசுரக் குடிநீருக்கு சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவுதலை குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்தும் தடுக்கும் சக்தி அறியப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வு

ஒன்பது  வகையான வேறுபட்ட இலக்குகளுடன் கீழக்கண்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

1. கபசுரக்குடிநீர் எடுத்த 20 ஆயிரம் சுகாதார ஊழியர்களிடம் ஆய்வு. 

2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கபசுரக் குடி நீர் மீதான open randomised clinical trial. வைரல் அளவு குறைவதை, நோய் எதிர்ப்பாற்றல் உயர்வை அறியும் ஆய்வு இது.

3. கோவிட் நோய் நிலையில், எதிர்ப்பாற்றல் விஷயத்தில் கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின்- சி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க, நடத்தப்பட்ட தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற  ஆய்வு.

4. கோவை மருத்துவக்கல்லூரி - ஈஎஸ்ஐ மருத்துவமனை இணைந்து கபசுரக் குடிநீர் மற்றும் வைட்டமின்- சி - ஜிங்க் சத்து கூட்டு சிகிச்சையின் பயன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு.

5. முதல் நிலை மருத்துவப் பணியாளருக்கு கபசுரக் குடிநீரால் ஏற்பட்ட பாதுகாப்பு ஆய்வு.

6. மக்களிடையே கோவிட்- 19 நோய் நிலையில் சித்த மருந்துகளின் பயன்பாட்டு விழிப்புணர்வு ஆய்வு.

7. சென்னை நோய்த்தடுப்பு முகாம்களில் தங்கியிருந்தோருக்கு கபசுரக் குடிநீர் பயன்பட்ட ஆய்வு.

8. SSMRi file எனும் கபசுரக் குடி நீர்  கோவிட் நிலையில் பயன்பட்ட ஆய்வு

9. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கபசுரக் குடிநீர் மீதான ஆய்வு.

;