புதுதில்லி, டிச.17- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியதால் காவல்துறையின் கடும் தாக்குதலுக்கு உள்ளான ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புகலிடமாக தில்லியில் உள்ள கேரளா ஹவுஸ் மாறியது. மாணவர்களின் பாதுகாப்புக்காக முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின்படி கேரள அரசு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக கேரளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். அதைத் தொடர்ந்தே தில்லியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் கேரள ஹவுசில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது கேரள ஹவுஸ் சிறப்பு அதிகாரியுமான ஏ.சம்பத் தலைமையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஜாமியாவிலும் அலிகாரிலும் தில்லி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை அமைதியாக நடத்தினர். ஆனால், காவல்துறையினர் கண்மூடித்தனமான கொடிய தாக்குதலை மாணவிகளிடம் கூட நடத்தினர். அதைத் தொடர்ந்து மாணவர் போராட்டம் மற்ற மாநிலங்களிலும் வலுவடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எல்டிஎப்- யுடிஎப் தலைமையில் திருவனந்தபுரம் ரத்தசாட்சி மண்டபத்தில் ஜனநாயக பாதுகாப்பு சத்தியாக்கிரகம் திங்களன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.