tamilnadu

img

தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பாஜக செய்த தில்லு முல்லு அம்பலம் 

பாஜக ஆட்சிக்கு வந்ததில்  இருந்து தேர்தல் ஆணையத்தை  தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகங்களை பா.ஜ.கவின் ஐ.டி விங் கையாண்டது தற்போது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பான தகவலை, சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி விவரங்கள் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக தங்கள் சமூக ஊடகங்கள் பணிக்காக பா.ஜ.க ஐ.டி விங்கை இந்திய தேர்தல் ஆணையம் பணியமர்த்தியுள்ளது. மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் ஆணையர் சார்பில் வெளியிட்டப்பட்ட சமூக வலைதள விளம்பரங்களில் ‘202, பிரஸ்மேன் அவுஸ், விலே பார்லே, மும்பை’ ("202 Pressman House, Vile Parle, Mumbai") என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகவரி ‘சைன்போஸ்ட் இந்தியா’ ( Signpost India) என்னும் விளம்பர நிறுவனம் என்றும் இது அப்போதைய பா.ஜ.க அரசின் ஆதரவின் கீழ் செயல்படும் நிறுவனம் எனவும் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  ‘சோசியல் சென்ட்ரல்’ ("Social Central") என்னும் இணையதள ஏஜென்சிக்கு பா.ஜ.க ஐ.டி. விங்-கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க் தவேயே உரிமையாளர் ஆவார்.  இவர்தான் அரசு அமைப்புகள், பா.ஜக மற்றும் மகாராஷ்டிர மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், தி ஃபியர்லெஸ் இந்தியன், ஐ சப்போர்ட் மோடி போன்ற இணையப் பக்கங்களையும் இவர் நடத்தி வந்துள்ளார். இவரின் நிறுவன வாடிக்கையாளர்களின் பட்டியலில், பா.ஜ.க, தேர்தல் ஆணையம் மற்றும் இன்னும் பல அரசு நிறுவனங்களும் இருந்துள்ளது. 
இந்த தகவலை வெளியிட்ட சாகேத் கோகலே கூறுகையில், “தேர்தல் நடைபெறும் நேரங்களில் அரசியல் கட்சிகளின் ஐ.டி விங் மற்றும் அதன் செயல்பாடுகளை கவனிக்கவேண்டிய தேர்தல் ஆணையமே, ஆளும் கட்சியினரின் ஐ.டி குழுவோடு இணைந்து செயல்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் குழுவுடன் இணைந்து மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என ஏன் முடிவு எடுத்தது? இது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் - நடுநிலைமை விதிமுறைகளுடன் ஒத்துப்போகுமா? பா.ஜ.கவின் குழுக்களோடு இன்னும் தொடர்பு உள்ளதா? இதற்கான பதிலை இந்திய தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும்” என வலியுத்தி உள்ளார்.  சாகேத் கோகலே குற்றச்சாட்டு தொடர்பாக இந்தியா தேர்தல் ஆணையம் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கையை  ஏற்படுத்தி உள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் பாஜக ஆதரவு ஆணையமாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இதன் ஒருபகுதியாக சிக்கிம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு தேர்தலில் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலையில் இருந்தார். அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் தேர்தல் ஆணையம் அவர் போட்டியிடும் வகையில் 6 ஆண்டு என்பதை  1 ஆண்டு 1 மாதம் என விலக்கு அளித்தது. அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தனது அமைச்சரவையை பாஜகவுடன் பகிர்ந்து கொண்டார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் ஆணையத்தின் உரிமை என்று தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் கடந்த 2019 நாடாளு மன்றதேர்தலில் 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே முரண்பாடு இருந்தது அம்பலமானது ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.