வில்லம்பு பட்டவோர் அன்னம் கண்டு, விழிநீரைக் கொட்டியநல் புத்தன் வடிவாய், வெள்ளையனால் விலங்கணிந்த தாயைக்கண்டு, வீறிட்டு விலங்கொடித்த காந்தி எம்மான் ! கொடியோர்கள் சிலுவையிலே அறையும்போழ்தும் கோலமொழி மாறாத ஏசு வடிவாய், சுடர்மார்பில் கொடுங்’கோட்சே’ சுட்டபோதும் சபிக்காது, ராம், ராம், ராம் என்ற எந்தாய் ! அறிவற்றோர் கல்லெறிந்து சிதைத்தபோதும், அகக்கொள்கை தளராத நபியின் வடிவாய், நெறியற்று அன்னியர்கள் வதைத்த போதும், நெஞ்சுறுதி மாறாத காந்தி எம்மான் ! அறமென்னும் போர்செய்து வெற்றிபெற்றாய் ! அகிம்சையின் தீபத்தை ஏற்றி வைத்தாய் ! ஒருநூற்று ஐம்பதுதான் ஆண்டெனினும்… உலகுள்ள காலம்வரை நீ வாழ்வாய் !
- ந.காவியன்