சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் மர்மமான முறையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி அஸ்வானி குமார் கடந்த2006 முதல் 2008 வரை இமாச்சல் மாநில டிஜிபியாகவும் பின்னர் 2008 முதல் 2010ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 2013 -14 ஆண்டுகளில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தார். சிம்லாவில் ஒரு தனியார் பல்கலையில் துணை வேந்தராகவும் இருந்தது வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அஸ்வானி குமார் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் தனது தற்கொலை குறிப்பில் தனது ஆத்மா புதிய பயணத்தை தொடங்கி இருப்பதாகவும், தனது உடலுக்கு எந்த சடங்கும் கூடாது என்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வானி குமார் சிபிஐ இயக்குநராக இருந்த காலத்தில் இந்தியாவை உலுக்கிய ஆருஷி கொலை வழக்கு, காமன் வெல்த் ஊழல், செராபுதீன் என்கவுண்டர் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டார். தற்போதைய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கைது செய்யப்பட்ட போதும் அவர் சிபிஐ இயக்குநராக பணியில் இருந்தார். பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில் அவர் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.