tamilnadu

img

வெட்கம்! வெட்கம்!

ரஞ்சன் கோகோய் பதவியேற்புக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, மார்ச் 19 - ‘‘வெட்கம், வெட்கம்...’’ என்ற ஆவேச முழக்கம் அவையை நிரப்பியது. சற்றும் வெட்கமற்ற முறையில் ரஞ்சன் கோகோய் பதவியேற்றுக் கொண்டிருந்தார்.  அது, பாபர் மசூதி இடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஆளும் பாஜக - இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக அவர் அளித்த தீர்ப்புகளுக்கு கைமாறாக கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி. ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டு, அந்தப் பதவியில் மார்ச் 19 வியாழனன்று காலை ஒட்டிக்கொண்டார் நீதிபதி கோகோய்.

உச்சநீதிமன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், தமது தீர்ப்புகளுக்கு கைமாறாக கிடைக்கப்பெற்ற மாநிலங்கள வை உறுப்பினர் பதவியை ஏற்பதற்காக வியாழனன்று அவைக்கு வந்தார். அவருக்கு அவையின் தலைவர் வெங்கய்யா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அந்தத் தருணத்தில், அவை யில்  காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திமுக ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்துநின்று ஆவேசத்துடன் வெட்கம் வெட்கம் என்று முழக்கமிட்டனர். அநேகமாக இந்திய நாடாளு மன்றத்தின் வரலாற்றில் ஒரு உறுப்பினர் பதவியேற்பின்போது இப்படிப்பட்ட கடும் எதிர்ப்பை சந்தித்தது இல்லை என்று குறிப்பிடலாம். முழக்கமிட்டவாறே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்து எதிர்ப்பினை பதிவு செய்தனர். அது பற்றி பின்னர் பேசிய அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல் மிகவும் கவலையளிக்கிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

ரஞ்சன் கோகோய் பதவியேற்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்றத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறுகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர், பணி ஓய்வுபெற்றவுடனே ஆளுங்கட்சியின் உதவியோடு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க துணை போவதாகும்; சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் கடும் விமர்சனத்திற்கு இடையே ரஞ்சன் கோகோய் பதவியேற்றது நாட்டிற்கு மிகப்பெரும் அவமானமாகும் என்று குறிப்பிட்டார்.