tamilnadu

img

மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிரான மத்திய நிதிநிலை அறிக்கை - சிபிஎம்

மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (1.02.2020) நாடாளுமன்றத்தில் மிக
நீண்ட நேரம் அளித்த நிதிநிலை அறிக்கை, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த,
தனியார்மய, தாராளமய கொள்கைகளை தீவிரப்படுத்தும், மக்கள் எதிர்பார்ப்புக்கு
எதிரான பட்ஜெட்டாக உள்ளது.
இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வரும்
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்ற அறிவிப்பு பொதுத்துறைகளை
ஒட்டுமொத்தமாக அழிக்கும் நடவடிக்கையாகும்.
நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை
இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் மந்தநிலை, உற்பத்தி, தொழிற்சாலைகள்
முடக்கம், வேலையின்மை அதிகரிப்பு போன்றவைகளை வெளிச்சம்போட்டு
காட்டியுள்ளது. இந்நெருக்கடிகளைப் போக்குவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள்
எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு தேவையான
நடவடிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் வருமானத்தை
இரட்டிப்பாக்குவோம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்போம் போன்ற
வார்த்தை ஜாலங்கள் இடம்பெற்றுள்ளதை தவிர, கிராமப்புற விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளிகள் வருமானத்தை பெருக்குவதற்கு கிராமப்புற வேலை
உறுதித் திட்டத்தை செயல்படுத்துவது, விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு
கட்டுப்படியான விலை தீர்மானிப்பது, விவசாயிகள் வாங்கியுள்ள கடன்
பாக்கிகளை தள்ளுபடி செய்வது போன்றவைகள் பெயரளவுக்கு கூட
இடம்பெறவில்லை. மேலும் கூலி உழைப்பாளிகள், நடுத்தர மக்கள்,

தொழிலாளர்கள் துயர் துடைக்க உருப்படியான திட்டங்கள் எதையும்
முன்வைக்கவில்லை.
குறிப்பிட்ட பகுதியினருக்கு வருமான வரி குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும்,
பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தின் மீது வரி உயர்த்தப்படவில்லை.
சமீபத்தில் வெளியான ஆக்ஸ்பார்ம் அறிக்கை இந்தியாவில் கார்ப்பரேட்
முதலாளிகள் எவ்வாறு கொழுத்து வருகிறார்கள் என்பதை விளக்கமாக
சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு “சொத்து
உருவாக்குபவர்கள்” என்ற பெயரில் வரிச்சலுகை அளிப்பதோடு, அவர்கள்
வருமானத்தின் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
பல்வேறு துறைகளில் கடந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட
தொகையைக் காட்டிலும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள்
அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக, ஊரக வளர்ச்சி, தூய்மை இந்தியா திட்டம்
உள்ளிட்ட சில திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை அமலாக்கப்படும்; கல்வித்துறையில் வெளிநாட்டு
நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படும்; தனியார்
ஒத்துழைப்போடு புதிய ரயில்கள் இயக்கப்படும் போன்ற அறிவிப்புகள்
அனைத்தும் தனியார்மயமாக்கும் அறிவிப்பாகவே உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்படவில்லை. மருத்துவத்துறையையும், அரசு மருத்துவமனைகளையும்
தனியார்மயமாக்கும் ஆபத்து இடம்பெற்றுள்ளது. சிந்து நாகரீகத்தின் பெயரை
‘சரஸ்வதி சிந்து நாகரீகம்’ என குறிப்பிட்டிருப்பது பண்டைய நாகரீகத்தை
மதமயமாக்குவது என்ற ஆபத்தான அறிகுறியாகும்.
மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக,
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பரிசளிப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் போக்கு
இந்திய நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தவும், நாட்டு
மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவுமே உதவி செய்யும் என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

;