tamilnadu

img

மத்திய பட்ஜெட்டில் ஊனமுற்றோர் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது

மத்திய பட்ஜெட்டில் ஊனமுற்றோர் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, பொதுச் செயலாளர், முரளிதரன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட் குறித்து தன்னுடைய முழுமையான விரக்தியை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வெளிப்படுத்திக்கொள்கிறது. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நிதியமைச்சர், முதியோருடன் இணைத்து ஓரிடத்தில் ஊனமுற்றோர் குறித்துக் குறிப்பிட்டிருப்பது மட்டுமே காணப்படுகிறது. குடியரசுத்தலைவர் உரையில் ஊனமுற்றோர் குறித்து அதிகம் கவலைப்பட்டதுபோன்று இந்த அரசு காட்டியிருந்தபோதிலும், பட்ஜெட் உரையில் அதற்கான ஒதுக்கீடு என்பது அநேகமாக இல்லை.  

2016 ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தில் கண்டுள்ள பல்வேறு ஷரத்துக்களை அமல்படுத்துவதற்கான ஒதுக்கீடுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 1995 ஊனமுற்றோர் சட்டம் அமலாக்கத்திற்கான திட்டத்திற்கான ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டிருக்கிறது.  

ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்தொகை தற்போது மாதத்திற்கு 300 ரூபாய் என்று இருப்பதை உயர்த்திடக்கூடிய விதத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லை.

நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையும், மனநலம் பாதித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் தேசிய மனநலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் கணிசமான உயர்வினை ஏற்படுத்திட மத்திய பட்ஜெட் மறுத்திருக்கிறது. உண்மையில் பெங்களூரில் இயங்கிவரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் & நீரோசயின்சஸ் மற்றும் தேஷ்பூரில் இயங்கிவரும் லோக்பிரியா கோபிநாத் போர்டோலி ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

ரயில்வே உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் அறிவிப்புகள் ஊனமுற்றோரைக் கடுமையாகப் பாதித்திடும்.   

இவ்வாறாக ஊனமுற்றோர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தன் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறது.

இவ்வாறு முரளிதரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)