tamilnadu

img

தலித் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை: நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசாங்கம் -சிபிஎம் கண்டனம்

பாலியல் வன்புணர்வுக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஹத்ராஸ் (வயது 20) என்னும் தலித் இளம்பெண்ணிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நீதி வழங்கிட அப்பட்டமாக மறுத்திடும் உத்தரப்பிரதேச மாநில ஆதித்யநாத் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சியில் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஹத்ராஸ் மரணத்திற்கு, எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க பிடிவாதமானமுறையில் மறுத்து வரும் அரசாங்கத்தின் மூர்க்கமான அணுகுமுறையே காரணமாகும். பாலியல் வன்முறைக்கு உள்ளாகிய தலித் இளம்பெண்ணை செப்டம்பர் 14 அன்று உயர்சாதியைச் சேர்ந்த நால்வர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொடுங்காயங்களையும் விளைவித்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணிற்கு நாக்கு வெட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு ரத்தம் கொட்டிக் கொண்டே இருந்திருக்கிறது. எனினும் சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுத்திருக்கின்றனர். அந்தப்பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவும் மறுத்திருக்கின்றனர். அவ்வாறு அனுப்பியிருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியும். அதுமட்டுமல்ல, சாதியக் கொடுமைகளின் உச்சகட்டமாக, அந்தப் பெண்ணின் உடலைக் காவல்துறையினரே எரித்துவிட்டனர். இதன்மூலம் அவருடைய குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கான உரிமையையும் காவல்துறையினர் அளிக்காமல் மறுத்துள்ளனர்.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான சாதிய அடிப்படையிலான பாலியல் வன்புணர்வுக் குற்றம், உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்ற அக்கிரம ஆட்சியின் பிரதிபலிப்பேயாகும். இந்த அரசாங்கம் சாதிய மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அளித்துவரும் ஆதரவுதான் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றன. தேசியக் குற்றப் பதிவேட்டு நிலையத்தின் (என்சிஆர்பி-யின்) சமீபத்திய அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது.

முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுத்திட்ட காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலுக்கட்டாயமாக சடலத்தை எரித்த கொடூரமான நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந.நி