புதுதில்லி:
மகாகத்பந்தன் கூட்டணி, ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கு எதிராக கடும்போட்டியை அளித்த நிலையில், இடதுசாரிக்கட்சி வேட்பாளர்கள் உட்பட மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஆதரவு அளித்த பீகார் வாக்காளர்கள் அனைவருக்கும் இடதுசாரிக்கட்சிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் சம்பந்தமாகவும், வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் இளைஞர்கள் மத்தியில் பிரதிபலித்த வரவேற்புமகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.இரு கூட்டணிகளுக்கும் இடையே வாக்கு சதவீதத்தில் மிக மிகச் சிறிய அளவிலேயே வித்தியாசம் இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும்போது, பாஜக தலைமையிலான கூட்டணி 12 சதவீத வாக்கு சதவீதத்தை இழந்திருக்கிறது.முதலமைச்சராக இருந்த, இப்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. இது கடந்த தேர்தலின்போது 71 இடங்களை வென்றிருந்தது. இவர் மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து பாஜக பக்கம் சாய்ந்ததை பெருவாரியான மக்கள் நிராகரித்திருப்பதே இத்தகைய வீழ்ச்சிகளின் காரணிகளில் ஒன்றாகும்.இடதுசாரிக் கட்சிகள் மொத்தம் 29 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சிபிஐ(எம்-எல்)-12, சிபிஎம்-2, சிபிஐ-2.
மதவெறியை பரப்பிய பிரதமர்
பாஜகவும் பிரதமர் மோடியும் மதவெறி நிகழ்ச்சிநிரலை மிகவும் மூர்க்கமாக முன்னிறுத்தினார். வாக்காளர்களிடம் மதவெறித் தீயை மிக மோசமாக விசிறிவிட்டனர். இதனைமகாகத்பந்தன் கூட்டணி வலுவாக எதிர்கொண்டது. இதற்கு எதிராக மகாகத்பந்தன், சமூக முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார அவலநிலை மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்திருப்பதையும், வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக உயர்ந்திருப்பதையும் வாக்காளர்களிடம் எடுத்துச் சென்றன.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, கடைசி கட்டங்களில் மிகப்பெரிய அளவிற்கு ஒழுங்கீனங்கள் இருந்ததைத் தெளிவான முறையில் பார்க்க முடிந்தது என்றும், இதனை தேர்தல் ஆணையம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றும் இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன. மகாகத்பந்தனில் அங்கம் வகிக்கும் இதரக் கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் இந்த விஷயத்தை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எடுத்துச் செல்லும்.இடதுசாரிக்கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் செல்வதை, உழைக்கும் மக்களின் லட்சியங்களை முன்னேற்றுவதற்கும், வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக பொருளாதார அநீதிகள் மீதான பிரச்சனைகளை எழுப்புவதற்கும் பயன்படுத்திக்கொள்ளும். இந்தக்குறிக்கோள்களை எய்துவதற்கான போராட்டங்கள் வீரியத்துடன் தொடரும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)