மக்களவை தேர்தலில், பாஜக ரூ.27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக ஊடக ஆய்வு மையம் (CMS - Center for Media Studies), அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தல், எங்கும் இல்லாத அளவுக்கு அதிக செலவில் நடத்தப்பட்ட தேர்தல் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் செலவுகள் குறித்து, ஊடக ஆய்வு மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை, கடந்த 3-ஆம் தேதி அறிக்கையாக வெளியிட்டது. அதில், 2019 மக்களவை தேர்தலுக்கான மொத்த செலவு ரூ.60 ஆயிரம் கோடி என்றும், அதில் பாஜக 45 சதவீதம் (ரூ.27 ஆயிரம் கோடி) செலவு செய்துள்ளது என்றும், இந்த மொத்த செலவானது, கடந்த 2014-ஆம் ஆண்டின் தேர்தல் செலவை விட அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1998-ஆம் ஆண்டின் மொத்த தேர்தல் செலவில், 20 சதவீதமும், இந்த ஆண்டிற்காக மொத்த தேர்தல் செலவில், 45 சதவீதமும் பாஜக செலவு செய்துள்ளது. அதேபோல் கடந்த 2009-ஆம் ஆண்டின் மொத்த தேர்தல் செலவில், 40 சதவீதமும், இந்த ஆண்டிற்கான மொத்த தேர்தல் செலவில் 15- 20 சதவீதம் காங்கிரஸ் செலவு செய்துள்ளது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாம்நிலை தகவல், புல ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு வாக்காளருக்கு, செலவிடப்படும் தொகை ரூ. 700 என்று கணக்கிடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மக்களவை தேர்தலுக்கும் ரூ.100 கோடி செலவு என்று கணக்கிடப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையின்படி, ரூ.12,000 கோடியில் இருந்து ரூ. 15,000 கோடி வரை நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.20,000 கோடியில் இருந்து ரூ.25,000 கோடி வரை விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், ரூ.5,000 கோடி லாஜிஸ்டிக்ஸ் செலவாகவும், ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.12,000 கோடி வரை முறைப்படியான செலவாகவும், ரூ.3,000 கோடியில் இருந்து ரூ.6,000 கோடி வரை இதர செலவாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த 2019 மக்களவை தேர்தலானது, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல். இது போன்று மிக பெரிய அளவிலான நிதி, கார்போரேட் நிறுவனங்கள் மூலமாகவே வருகிறது. ஆக, பிரச்சாரத்துக்காக, குடிமக்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட நிதி என்பது ஒரு பெரிய பொருட்டு அல்ல என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிஎம்எஸ் தலைவர் என்.பாஸ்கரா ராவ் கூறுகையில், ”வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் செலவு ரூ. 1 லட்சம் கோடியை கடக்கும். இது போன்று அதிகப்படியான தேர்தல் செலவுகள், ஊழலுக்கு வழிவகுக்கும். இது குறித்து, பேசாமல் இருந்தால், இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது. இது போன்ற செலவினத்தின் அளவு நம்மை பயமுறுத்துவதுடன், வலுவான மக்களாட்சி கட்டமைப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நம்மைத் தூண்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.