புதுதில்லி, செப்.18-
இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதித்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றை புதனன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்தபின் நிர்மலா சீத்தாராமன், இ-சிகரெட்டுகள் உற்பத்தி, இறக்குமதி/ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமித்துவைத்தல், மற்றும் விளம்பரம் செய்தல் ஆகிய அனைத்திற்கும் தடை விதிக்கப்படும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கம் ஓர் அவசரச்சட்டம் கொண்டுவர இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் கொண்டுவர இருக்கும் சட்டமுன்வடிவில், இ-சிகரெட் தொடர்பாக வழக்குப் பதிவு செய்பவர்களின்மீது, அவர்கள் முதல் குற்றவாளி எனில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். திரும்பத் திரும்பக் குற்றம்புரிபவர்களாக இருந்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இ-சிகரெட்டுகளைச் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இதேபோன்றே இ-ஹூக்காக்களுக்கும் தடை விதிக்கப்பட இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
புகையிலை உபயோகிப்பவர்களில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது. சுமார் 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை தொடர்பான பொருள்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒவ்வோராண்டும் குறைந்தபட்சம் 12 லட்சம் பேர் இறக்கிறார்கள்.
ரயில்வே தொழிலாளர்களுக்கு போனஸ்
அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 78 நாள் ஊதியம் ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனுடன் இணைந்த போனஸாக, (performance-linked bonus) வழங்கப்படும். இதனால் அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும், இதன்காரணமாக 11 லட்சத்து 52 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ந.நி