சென்னை:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதித்துறையை களங்கப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாபர் மசூதி இடித்தது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 32 பேர்களையும் விடுவித்து லக்னோ சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அந்நிகழ்வில் இருந்த பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் குற்றமற்றவர்கள் எனவும், மசூதி இடிப்பு திட்டமிடப்பட்டது அல்ல எனவும், வழக்கினை தொடுத்துள்ள சிபிஐ குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சியங்களை அளிக்க தவறியுள்ளது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அப்படியானால் கடமை தவறிய சிபிஐ மீது ஏன் நடவடிக்கையினை நீதிமன்றம் சிபாரிசு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
கடந்த ஆண்டு அயோத்தி வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது மிக மோசமான சட்டத்தை மீறிய கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லக்னோ சிறப்பு நீதிமன்றம் கிஞ்சித்தும் கருத்தில்கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருப்பது நீதித்துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.எனவே, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஐ) உடனடியாக இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்திட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தையும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக நியதிகளையும் நிலைநிறுத்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.