tamilnadu

img

நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டிய மருத்துவமனையில் 10 நஞ்சு பாம்புகள் ...!

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கோயில்களைப்போல் ராஜா மிராசுதார் மருத்துவமனை உரிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருப்பதாகவும் அதைப்பார்த்த பின் மனமுடைந்ததால் தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டேன். அதனால் கோயில்களை பராமரிப்பதைப்போல் மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பராமரிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது கொரோனா பேரிடர்காலத்தில் மத்திய மாநில அரசுகளின் தோல்விகளை மறைக்க திட்டமிட்டு சங் பரிவார அமைப்புகள் ஜோதிகா இந்து கோயில்களை குறித்து அவதூறாக பேசியதாக திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நடிகை ஜோதிகாவை திட்டமிட்டு ஆபாசமாகவும் விமர்சித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். நேற்று ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டி பேசிய தஞ்சை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் ஊழியரை, இன்று மருத்துவமனை வளாகத்தினுள் பாம்பு ஒன்று தீண்டியது. இதையடுத்து அந்த பெண் ஊழியர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின்பேரில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அங்கு சுற்றித் திரியும் பாம்புகளை வனவிலங்கு ஆர்வலர்கள் கொண்டு பிடிக்கும் பணியும் நடைபெற்றது. இதில் கொடிய விஷம் கொண்ட ஐந்து கட்டுவிரியன் பாம்பு உட்பட 10க்கும் மேற்பட்ட விசப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம், நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.