tamilnadu

img

ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்

புதுச்சேரி, மார்ச் 30- புதுச்சேரி சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் (மார்ச்-30) திங்களன்று காலை கூடியது. பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து திருக்குரலை வாசித்து பேரவைகூட்டத்தை துவக்கினார். கூட்டம் துவங்கிய உடனே மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் ஆகியோருக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து  ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத அரசின் செலவினங்களுக்கு ரூ. 2042 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இடைக்கால பட்ஜெட்டை, நிதி பொறுப்பை வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். பின்னர் உறுப்பினர்களின் ஒப்புதலோடு இடைகாலபட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

நிவாரணம் ரூ.2ஆயிரம்

முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பு குறித்து  பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்தார்: கொரோனா தொற்றால் சிகிச்சை பெற புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்டிலேட்டர்கள் தற்போது உள்ளன. படுக்கைகளும் தயாராக உள்ளன.  கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் 4ம், காரைக்காலில் இரண்டும் உள்ளன.  புதுச்சேரியில் இதுவரை ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. சிகிச்சை பெற்றவரும் குணமடைந்து விட்டார். சுகாதாரத்துறை ரூ. 7.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது., பேரிடர் துறை ரூ. 12.5 கோடி கரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் கரோனா கட்டுப்படுத்த புதுச்சேரி்ககு ரூ. 995 கோடி நிதி கோரி கடிதம் எழுதியுள்ளேன்.கரோனாவால் பாதிக்கபட்டள்ள  அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அத்தொகை செவ்வாய்கிழமை (மார்ச் 31) முதல் அவரவர் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும். புதுச்சேரியில் சமூக கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளனர். மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும். முதலில் சட்டமன்ற உறுப்பினர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பேரவைக்கூட்டத்தை மறு தேதி குறிப்பிடாமல் பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிப்பு

இக்கூட்டதொடரில் கொரோனா தொற்று பாதிப்பை தொடர்ந்து சட்டப்பேரவையில் சமூக இடைவெளி விட்டு பேரவையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. முக்கிய எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவைக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள், பாஜக நியமன உறுப்பினர்கள் பேரவைக்கூட்டத்தை ஒத்திவைத்து கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்ககோரி, பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாஹே உறுப்பினர் பேராசிரியர் ராமச்சந்திரன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்றவில்லை. இக்கூட்டத்தொடர் 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.