tamilnadu

img

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி உச்சநீதிமன்றம்

உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் உச்ச  நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இதனை எதிர்த்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி அவரது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ.50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் உள்ளது, என்று கூறியிருந்தார்.

இது குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனுவில், தனது டிவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்று கூறி, அதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி, தகுதி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், தற்போது அவரது நடவடிக்கையைக் குற்றமாகக் கருதி அவரை குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.

இவைகளுக்கு இடைய, சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவுகள் இரண்டும் தற்போது சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதால் டிவிட்டர் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

;