காரைக்காலில் 1000க்கும்மேற்பட்டோர் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீ ராமுலு ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு செய்தார். இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
காரைக்கால் மாவட்டத்தில் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ளநிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலரா பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்த நிலையில் புதுச்சேரி அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.