புதுக்கோட்டை, ஜூலை 12- அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைபட்ட வித்தியாச தொகையை அரசே எற்று நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பொதுச் செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் பேசினர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், தலைவர் கே.கார்த்திக்கேயன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் பி.சக்திவேல், டிடிஎஸ்எப் பொதுச் செயலாளர் எச்.இராஜசேகர் மற்றும் சிவ.பட்டார், பொன்.நாகராஜன், கோபாலன், வின்சென்ட் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைபட்ட வித்தியாச தொகையை அரசே எற்று நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் தன்னிச்சையாக செலவு செய்த தொழிலாளர்களின் சேமிப்புப் பணம் ரூ.8,300 கோடியை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.