tamilnadu

புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

காவல் உதவி ஆய்வாளரின் மகன் தற்கொலை
பொன்னமராவதி, ஜூன் 5 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்டியின் மகன் கவியரசு(19). இவர் மும்பையில் உள்ள ஏர்போர்ஸ் விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பயிற்சியின் போது தடுமாறி விழுந்துள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தார். மேலும் அங்கே பயிற்சியின் போது அடிக்கடி உடல்நிலை சரியில்லாத நிலை இருந்ததால் பயிற்சியை பாதியுடன் நிறுத்திவிட்டு, ஆண்டி தன் மகன் கவியரசுவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். மருத்துவ சிகிச்சை எடுத்த பின்பு சொந்த ஊரான பொன்னமராவதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கவியரசை திடீரென காணவில்லை. செவ்வாயன்று முழுவதும் குடும்பத்தினர் அவரை தேடினர். பின்னர், வலையபட்டி மலையாண்டி கோவில் பின்புறமுள்ள வயல் பகுதியில் ஒரு சடலம் கிடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த காவலர் ஆண்டி, இறந்துகிடப்பது தன் மகன் கவியரசுதான் என அறிந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால், கவியரசு மனவிரக்தியில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கவியரசுவின் உடலை பொன்னமராவதி வலையப்பட்டியில் உள்ள பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூன் 5 -புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 8 அன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019 ஜூன் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 8 அன்று நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் பார்வையாளராக இருப்பார். புதுக்கோட்டை வட்டம் கணபதிபுரம், ஆலங்குடி வட்டம் இம்மனாம்பட்டி, திருமயம் வட்டம் வெங்களூர், குளத்தூர் வட்டம் கடம்பவயல், இலுப்பூர் வட்டம் விளாப்பட்டி, கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம், அறந்தாங்கி வட்டம் எட்டியத்தளி, ஆவுடையார்கோவில் வட்டம் பொன்பேத்தி, மணமேல்குடி வட்டம் சாத்தியடி, பொன்னமராவதி வட்டம் வார்ப்பட்டு, கறம்பக்குடி வட்டம் அதிரான்விடுதி, விராலிமலை வட்டம் ஆம்பூர்பட்டி ஆகிய கிராமங்களில் இந்த குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும். மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.