கீரமங்கலம், செப்.18- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் செரியலூர் இனாம், ஜெமின் கிராமங்களுக்கு செல்லும் சாலை பிரிவு சாலையாக செல்கிறது. மாரியம்மன் கோயில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கடந்த ஆண்டு கேபிள் புதைக்கும் பணிக்காக சாலையை உடைத்து பணிகள் நடந்தது. அதன் பிறகு பாலம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதனை மண் கொட்டி சீரமைத்தனர். இந்நிலையில், கீரமங்கலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 2-வது நாளாக பெய்த மழையில் மீண்டும் அந்த பாலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாகச் சென்றவர்கள் அந்த ஓட்டையில் விழுந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, தொடர்ந்து இந்தப் பாலம் உடைந்து வருகிறது. உடையும் போது மண் கொட்டி சீரமைக்கிறார்கள். அதன் பிறகு சில நாட்களில் மழை பெய்தால் மறுபடியும் உடைகிறது. அதனால் பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்றனர்.