அறந்தாங்கி, ஆக.24- புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே வடுகாடு மற்றும் வண்ணியப் பிள்ளைவயல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வராததால் மேலபட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோ.கண்ணன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் வெள்ளைச்சாமி ஊர் பிரமுகர் பாலு ஆகியோர் தலைமையில் மூன்று முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் வடுகாடு கிராமத்தில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மறியல் செய்தவர்களுடன் பேச்சு நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.