உதகமண்டலம்,பிப்.06- நீலகிரி மாவட்டம், முதுமலையில் வனத்துறையால் வளர்க்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வியாழக்கிழமை அன்று முதுமலையில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமை துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார்.அப்போது அவர் அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை ,டேய் இங்கே வாடா என்று ஒருமையில் அழைத்ததுடன் தனது செருப்பை கழட்டி விடுடா என்று ஆணவத்துடன் கூறினார். இதனால் பயந்த அந்த சிறுவன் வனத்துறை அமைச்சர் கால்களில் அணிந்திருந்த காலணிகளை தனது கையால் கழற்றினான். பின்னர் அவனையே அதனை தூக்கிவர கூறியுள்ளார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செருப்பை சிறுவன் கழற்றும் போது, பத்திரிகையாளர்கள் அதனை புகைப்படம் எடுத்ததால் ஆளும் கட்சியினர் மறைத்து நின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் இதனை கண்டும் காணாமல் இருந்து கொண்டனர். பழங்குடியின சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்றச்சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அமைச்சரின் இத்தகைய செயலுக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளர் அடையாள குட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை புலிகள் சரணாலயத்துக்கு வருகை தந்திருந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். அப்போது முதுமலை தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளிக்கப்படும் இடத்தின் அருகில் வந்த வனத்துறை அமைச்சர், அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவனை “ டேய் இங்க வாடா” என மரியாதைக்குறைவாக அழைத்து, தனது காலில் இருந்த செருப்பை கழற்றச் சொல்லி அதட்டும் தொனியில் பேசியுள்ளார்.இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் , பொதுமக்கள் அம்மாணவனின் பெற்றோர் என அனைத்துத் தரப்பு மக்களும் கூடியிருந்த ஒரு பொது இடத்தில், தனது பொறுப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையிலும், மிகவும் கண்ணியக் குறைவாகவும், ஆணவத்தோடு நடந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழங்குடி மாணவனிடம் அருவருக்கத் தக்க வகையில் நடந்து கொண்ட அமைச்சர் உடனடியாக பகிரங்க மன்னிப்பையும் கோர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழங்குடி மக்களை திரட்டி பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.